போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!
மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
போராட்டங்களின்போது காவல்துறை மேற்கொள்ளும் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ச்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்தது.
அப்போது ஒரு மனுதாரரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிகார் போராட்டத்தில் மாணவர்களுக்கு எதிராக ஏகே-47 ரக துப்பாக்கியைக் காவல்துறை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பேசியதாவது:
“அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதை மறுக்க முடியாது. போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக மட்டும் காவல்துறையின் அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது.
போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே தடியடி நடத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. ஜனநாயக நடைமுறைக்கு அவசியமான சுயக்கட்டுப்பாட்டு ஒழுக்கம் தேவை” எனத் தெரிவித்தார்.
அப்போது, காவல்துறைக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் ஒருவர், போராட்டக்காரர்களால் காவல்துறையினர் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, "யாராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு தனிநபரின் உயிரும் முக்கியமானது" என்று நீதிபதி ஜாய்மால்யா பாக்ச்சி கூறினார்.
மேலும், "போராட்டம் நடத்துவதற்காக விதிமுறைகளை வகுக்க வேண்டும். போராட்டத்துக்குப் போதுமான இடவசதி இருக்க வேண்டும், கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. ஆனால், சமூக விரோத சக்திகள் போன்றவை இருந்தால், அதைக் காவல்துறை கையாளலாம். இது தில்லி தொடர்பான பிரச்னை மட்டுமல்ல" என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இதையடுத்து, அனைத்து வழக்குகள் நாளை (ஜூலை 28) விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது.
முன்னதாக, சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையின் அடக்குமுறை தொடர்பாக முறையிடப்பட்ட வழக்கில், “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், இதுதொடர்பான காணொலிகளைப் பார்க்க விருப்பமில்லை, நேரமுமில்லை” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் புதன்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
Police excesses during protests cannot be justified! Chief Justice condemns the actions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.