அமெரிக்காவில் சட்டவிரோதமாக பணிபுரிந்த 30 இந்திய ஓட்டுநர்கள் கைது!
அமெரிக்காவில் 30 இந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டது பற்றி...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அரிசோனாவின் யூமா செக்டார் பகுதியில் கடந்த மே 11 முதல் 15 வரை நடத்தப்பட்ட 'ஆபரேஷன் செக்மேட்' சோதனையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 36 பேர் லாரி ஓட்டுநர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், கைது செய்யப்பட்ட 36 ஓட்டுநர்களில் 30 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் மட்டுமே கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்கடன் மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளனர்.
இவர்கள் 52 பேரையும் கூட்டாட்சிச் சட்டத்தின் கீழ் அவரவர் நாடுகளுக்கு நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டும் 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
30 Indian Drivers Working Illegally in the US Arrested!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.