ஹைதராபாத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்தவருக்கு எபோலா அறிகுறி!
ஹைதராபாத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்தவருக்கு எபோலா அறிகுறி தென்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்தவருக்கு எபோலா அறிகுறி தென்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
எபோலா பாதித்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சூடான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி விமான நிலையத்திற்கு சூடானில் வந்தார். அவருக்கு எபோலா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
சில ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வேகமாகப் பரவி வரும் நிலையில் அனைத்து சர்வதேச பயணிகளுக்கான பரிசோதனை மையத்தை விமான நிலைய சுகாதாரத் துறை அமைத்துள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ”சூடானைச் சேர்ந்த நபர் எபோலா பாதித்த நாடுகளுக்குப் பயணம் சென்று வந்துள்ளார். ஆனால், அவருக்கு எபோலா பாதிப்பு உறுதியாகவில்லை. அவரைப் பரிசோதனை செய்துள்ளோம். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவருக்கு எபோலா இருப்பதாகக் கூற முடியாது.
ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அந்த நபருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
எபோலா வைரஸ் நோய்த் தொற்று சிலநாடுகளில் பரவி வருவதையொட்டி, விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, மேம்படுத்தப்பட்ட பொது சுகாதாரத் தயார்நிலை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக ஹைதராபாத் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
உகாண்டா, காங்கோ மற்றும் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்.
எபோலா வைரஸ் மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளையும் தாக்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொற்று என உலக சுகாதார அமைப்பு அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
பழம் தின்னும் வௌவால்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற பாதிப்புக்குள்ளான காட்டு விலங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.