என்டிஏ நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள்: வெள்ளை அறிக்கை கோரி பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம்
தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வுகளில் நடந்த வினாத்தாள் கசிவுகள் அல்லது முறைகேடுகள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. திக்விஜய சிங் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த சில வாரங்களாக பல மாணவர்கள் என்னிடம் தெரிவித்த மிக முக்கியமான பிரச்னையை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். இளநிலை நீட் 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டதால், லட்சக்கணக்கான மாணவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இதற்கு முன்னதாக வினாத்தாள்கள் ஏதேனும் கசிந்தபோது எவ்வாறு விசாரிக்கப்பட்டன என்பது குறித்து அறிந்துகொள்வதிலும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உதாரணமாக, ஹசாரிபாகில் நடந்த நீட் 2024 வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் குமார், ஜாமீனில் வெளிவந்துள்ளதாக ஒரு புகார் கூறுகிறது. அதே சமயத்தில், தேசிய தேர்வு முகமையால் அப்போதே ரத்து செய்யப்பட்ட நீட் 2024 தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என சிபிஐ ஓர் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ-யின் இறுதி அறிக்கை குறித்து எழுத்துபூர்வமாக விளக்கமளிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டபோது, சிபிஐ கூடுதல் அவகாசம் கோரியது. இருப்பினும், சிபிஐ விளக்கமளிப்பதில் தாமதம் செய்தது, மாணவர்களிடையே எதிர்மறையான செய்தியைப் பரப்பியுள்ளது.
ஆகையால், மாணவர்களுக்கு வழங்கப்படும் நீதியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், கடந்த 8 ஆண்டுகளில் தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வுகளில் நடந்த வினாத்தாள் கசிவுகள் அல்லது முறைகேடுகளின் பட்டியல் குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்.
வினாத்தாள் கசிவு அல்லது முறைகேடு தொடர்பான ஒவ்வொரு விசாரணை தொடர்பாக தேசிய விசாரணை ஆணையமும் புலனாய்வு அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்தும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். இத்தகைய வெளிப்படைத்தன்மை, நமது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் ஒரு நடவடிக்கையாகச் செயல்படும்
வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் அழுத்தத்தில் இருக்கும் இக்காலகட்டத்தில், கல்வி அமைப்பின் மீதான மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது மிக அவசியம்
லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் அழுத்தத்தில் இருக்கும் இக்காலகட்டத்தில், கல்வி அமைப்பின் மீதான அவர்களின் நம்பிக்கையை நாம் வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
நிகழாண்டுக்கான நீட்-யுஜி தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வை நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.
இந்த தோ்வின் மாதிரி வினாத் தாள் ராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், என்டிஏ அதை ரத்து செய்தது. அதன்பிறகு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.