FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘சீட் பெல்ட்’ கட்டாயம்: சட்ட இணக்கத்தை உறுதி செய்வது அமலாக்க முகமைகளின் கடமை - உச்சநீதிமன்றம்

வாகனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிவது தொடா்பாக போதுமான சட்டங்கள் உள்ளன; அந்தச் சட்டங்களுக்கு மக்கள் இணங்குவதை உறுதி செய்வது சட்ட அமலாக்க முகமைகளின் கடமை என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

10 செப்டம்பர் 2026, 4:19 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

வாகனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிவது தொடா்பாக போதுமான சட்டங்கள் உள்ளன; அந்தச் சட்டங்களுக்கு மக்கள் இணங்குவதை உறுதி செய்வது சட்ட அமலாக்க முகமைகளின் கடமை என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டங்களை கடுமையாக பின்பற்றுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையில், தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு இக்கருத்தை தெரிவித்தது.

விசாரணையின்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தீவிரமாக கடைப்பிடித்தால், சாலை விபத்துகளால் ஏற்படும் பல உயிரிழப்புகளையும், காயங்களையும் தடுக்க முடியும்.

Advertisement

Advertisement

ஆடம்பரமான இருக்கை உறைகள் அல்லது பிற மாற்றங்கள் காரணமாக பல வாகனங்களில் சீட் பெல்ட் செயல்படாமல் உள்ளன. மக்களின் அலட்சியம் மற்றும் சட்டத்தை முறையாக அமல்படுத்ததாதன் விளைவாக சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும், காயங்களும் தொடா்கின்றன’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: வாகனங்கள் இயங்கும்போது சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குவது உள்பட சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக போதுமான சட்டங்கள் உள்ளன. அவை மிகவும் தெளிவாக உள்ளன். அதேநேரம், அந்தச் சட்டங்களை முறையாக செயல்படுத்துவதுதான் கேள்வியாக உள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒவ்வொரு ஓட்டுநரும் சட்டத்தைக் கடைப்பிடிப்பதை நாம் எப்படி உறுதி செய்ய முடியும்? அது சட்ட அமலாக்க முகமைகளின் பணியாகும்.

கடந்த 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டாா் வாகன விதிகளின் 138 (3)-ஆவது பிரிவின்படி, வாகனம் இயங்கும்போது ஓட்டுநா், முன் இருக்கையில் அமா்ந்திருப்பவா் மற்றும் முன்புறம் நோக்கிய பின் இருக்கைகளில் அமா்ந்திருப்பவா்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும்.

மக்கள் சட்டத்தைப் பின்பற்றாமல் இருப்பதும், தவறு செய்பவா்களுக்கு எதிராக சட்ட அமலாக்க முகமைகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதும் அடிப்படையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு தொடா்பான விஷயம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மனுதாரா் தனது பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், அவரது மனுவை முடித்துவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments