இந்தியாவில் ஒவ்வொரு 100 கி.மீ.க்கும் மொழியும், உணவும் மாறுகிறது! இளையராஜா
சுற்றுலா சிறப்பு கருத்தரங்கில், ம.பி. சுற்றுலாத் துறை செயலர் இளையராஜா பேசியது...
இந்தியாவில்தான் ஒவ்வொரு 100 கி.மீ.க்கும் மொழியும், உணவும் மாறுபடுவதாக ம.பி. சுற்றுலாத் துறை செயலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த கருத்தரங்கில் மத்திய பிரதேசத்தின் சுற்றுலாத்துறை செயலர் கலந்துகொண்டு “இந்தியாவின் இதயத் துடிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது:
”மத்திய பிரதேசம் என்றாலே அனைவருக்கும் போபால் விஷவாயு கசிவு சம்பவம்தான் நினைவுக்கு வரும். அதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போபால் விஷவாயு விபத்து அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்.
நாம் இந்தியாவை வியத்தகு இந்தியா என்றழைக்கிறோம். இந்த வியத்தகு இந்தியாவின் இதயத் துடிப்பாக மத்திய பிரதேசம் உள்ளது. நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதயம் என்றால் துடிக்க வேண்டும், இல்லையென்றால் அது இதயமே கிடையாது.
புலிகள் என்றாலே மத்திய பிரதேசம்தான் நினைவுக்கு வரும். ம.பி.தான் புலிகளின் மாநிலமாகவும், சிறுத்தைகளின் மாநிலமாகவும் இருக்கிறது. இங்கே 800 புலிகள் உள்ளன. நாட்டின் பசுமை மாநிலமாகவும் ம.பி. விளங்குகிறது. கிட்டத்தட்ட 25% நிலங்கள் காடுகளாகதான் உள்ளன.
நாட்டில் அதிகபட்சமாக ம.பி.யில் 18 யுனெஸ்கோ தளங்கள் உள்ளன. 3 நிரந்தரமான தளங்களும், 15 தற்காலிக யுனெஸ்கோ தளங்களாகவும் உள்ளன. குவாலியர், யுனெஸ்கோ இசை நகரமாகவும், போபால், யுனெஸ்கோ இலக்கிய நகரமாகவும் உள்ளன.
மாநில அரசால் பாதுகாக்கப்படும் 498 நினைவுச் சின்னங்களும், மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் 290 சின்னங்களும் உள்ளன.
பழங்குடியினரின் மாநிலமாகவும் ம.பி. இருக்கிறது. 9 புலிகள் காப்பகமும், 12 தேசிய பூங்காக்களும், 24 வன விலங்கு சரணாலயங்களும் உள்ளன. வனச் சுற்றுலா மற்றும் கிராமச் சுற்றுலாவின் மாநிலமாக ம.பி. இருக்கிறது.
இதுமட்டுமின்றி, ஆன்மிகச் சுற்றுலாத் தளமாகவும் ம.பி. விளங்கிறது. மஹாகால், ஓம்கரேஷ்வரர், உஜ்ஜைன் உள்ளிட்ட ஆன்மிக தளங்களுக்கு அதிகளவிலான தென்னிந்தியர்கள் வருகை தருகிறார்கள்.
இந்தியா ஒரு துணைக் கண்டமாக இருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு போன்று தோற்றமளிக்கிறது. ம.பி. மக்கள்தொகையை ஒப்பிட்டால், உலகின் 28 வது அதிக மக்கள்தொகை நாட்டைவிட பெரியது. ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையை ஒப்பிட்டால், நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் அதைவிட பெரியதாக இருக்கும். நம் நாட்டில் ஒவ்வொரு 100 கி.மீ.க்கும் மொழியும், உணவும் மாறுகிறது.
ம.பி.யில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 முதல் 26 வரை நடைபெறும் கஜுராஹோ நடன விழாவில் உலகம் முழுவதும் இருந்து கலைஞர்கள் வருகை தருவார்கள்” எனத் தெரிவித்தார்.
In India, language and food change every 100 km! — Ilaiyaraaja
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.