கர்வமாகவே சொல்கிறேன்... எவனும் இல்லை... இளையராஜா பேச்சு வைரல்!
கார்த்திக் சுப்புராஜ் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த இளையராஜா...
இசையமைப்பாளர் இளையராஜாவின் பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பாடல்களால் இன்றைய இளைஞர்களும் இசையும் வரியும் சுத்தமாக இருக்கிறது என இளையராஜாவைப் பாராட்டி வருகின்றனர்.
மேலும்,டோரதி திரைப்படத்தின் 18 பின்னணி இசைத்துணுக்குகளும் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியமாக, இளையராஜாவின் சிறந்த பிஜிஎம்-களில் ஒன்றான how to name it ஆல்பத்தில் இடம்பெற்ற do anything இசையை இப்படத்திற்காக நவீனப்படுத்தியுள்ளார். மேலும், ஏதும் இல்லை, சம்பவம், பிரியாவிடை உள்ளிட்ட பின்னணி இசைகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இளையராஜாவிடம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “கே. பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களிடம் பணியாற்றிவிட்டு என்னைப் போன்ற சுள்ளான் ஒரு திரைப்படத்தை எடுத்துவிட்டு உங்களிடம் கொண்டு வரும்போது என்ன நினைப்பீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு இளையராஜா, “என்னுடைய நோக்கமே புதிதாக வருபவர்களுக்கு இசையமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், அங்குதான் பாத்திரம் காலியாக இருக்கும். அதனால், புதிதாக வருபவர்கள் கதையுடன் வருவார்கள்; அதனை நிரப்பிக்கொடுப்பதுதான் என் வேலை. இதுமாதிரி, அதுமாதிரி இசை வேண்டும் எனச் சொன்னாலும் என் காதில் ஏறாது. இது நல்ல இசையா இல்லையா என்பதையே என் இசைதான் அளவீடாக கொண்டுள்ளது. என் இசைபோல் உலகில் வேறு ஏதாவது இருக்கிறதா? வேண்டுமென்றால் சோதனை செய்து பாருங்கள். என்னுடைய இசை போல் எங்கு இருக்கிறது? எல்லாருக்கும் இசையைக் கற்றுக்கொடுத்த வாத்தியார்கள் உண்டு. எனக்கு எவனும் இசை கற்றுக்கொடுக்கவில்லை. பொட்டல் காட்டிலிருந்து வந்தவன் நான். இன்றுவரை எனக்கு இசை தெரியாது. அதற்கு அடையாளம், நான் இன்னும் இசையமைத்துக்கொண்டிருப்பதுதான். இதை நான் கர்வமாகச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். கர்வமாகத்தான் சொல்கிறேன்” என்றார்.
இளையராஜாவின் இப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வழக்கம் போல், இளையராஜா கர்வமாகப் பேசுகிறார் எனச் சிலர் பதிவிட்டு வந்தாலும் அதே வழக்கம் போல் ராஜா ரசிகர்கள், ’எங்க ராஜா அப்படித்தான்’ என பேச்சைப் பாராட்டியும் வருகின்றனர்!
Music composer Ilaiyaraaja's speech is garnering attention on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.