FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிறப்பு, இறப்பு பதிவு திருத்தச் சட்டம் அக்.1-இல் அமல்

பிறப்பு, இறப்பு பதிவில் தாமதத்தைத் தடுக்க ஒழுங்குமுறைகளைக் கடுமையாக்கும் வகையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டம் வரும் அக்.1-ஆம் தேதி முதல் அமலாகவுள்ளது.

17 செப்டம்பர் 2026, 11:22 pm IST
பகிர்:

பிறப்பு, இறப்பு பதிவில் தாமதத்தைத் தடுக்க ஒழுங்குமுறைகளைக் கடுமையாக்கும் வகையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டம் வரும் அக்.1-ஆம் தேதி முதல் அமலாகவுள்ளது. இது தொடா்பான அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

நாட்டில் பிறப்பு, இறப்பு பதிவை தாமதமின்றி உரிய நேரத்துக்குள் மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 1969-ஆம் ஆண்டின் பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரையிலான சட்டத்தின்படி, பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வது கட்டாயம் என்பதுடன் ஓராண்டுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிா்வாக நடுவரிடமிருந்து உத்தரவு பெறுவது அவசியம்.

Advertisement

Advertisement

புதிய சட்டத் திருத்தத்தின்படி, 2 ஆண்டுகள் வரையிலான தாமதத்துக்கு மேற்கண்ட நடைமுறை தொடா்ந்து பொருந்தும். 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், முதல்நிலை குற்றவியல் மாஜிஸ்திரேட் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் மட்டுமே பதிவு மேற்கொள்ளப்படும். இதற்காக பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் 1969-இன் 13 (3) ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பான மசோதா, கடந்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது ஒப்புதலை வழங்கினாா். இந்த திருத்தச் சட்டம் அக்.1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

இதுதொடா்பான அரசிதழ் அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. பிறப்பு, இறப்பு பதிவு சட்டம்-2026-இன் 1-ஆவது பிரிவின் 2-ஆவது துணைப் பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, சட்ட அமலாக்கம் மேற்கொள்ளப்படுவதாக அரசிதழ் அறிவிக்கையில் இந்திய தலைமைப் பதிவாளா் மிருத்யுஞ்சய் குமாா் நாராயண் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments