ஆரவல்லி மலைத்தொடர் 'மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு' உள்ளாகியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்
மோடி அரசின் நடவடிக்கைகளால் ஆரவல்லி மலைத்தொடர் 'மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு' உள்ளாகியுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருப்பது தொடர்பாக...
புது தில்லி: ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை மறுவரையறை செய்ய மோடி அரசு எடுத்துள்ள முடிவால், அந்த பகுதி 'மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு' உள்ளாகி இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு, மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை நிராகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆரவல்லி மலைத்தொடரில் நடைபெறும் சுரங்கப் பணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த பிடிஐ செய்தி நிறுவனத்தின் மூன்று பகுதித் தொடர் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஆரவல்லி மலைத்தொடரில் நடைபெறும் "சுரங்கப் பணிகள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற வணிகத் திட்டங்களை அனுமதிக்கும் வகையில் ஆரவல்லி மலைத்தொடரின் வரையறையை மாற்றியமைக்க மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அந்த பகுதி மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 2027 பிப்ரவரி 9-ஆம் தேதி இந்தியத் தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே, இந்த விவகாரத்தில் இறுதி நடவடிக்கைகள் என்னவாகப் போகின்றன என்பது நமக்குத் தெரிந்துவிடும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்," என்று கூறியுள்ளார்.
ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகள் மற்றும் மறுவரையறை செய்ய மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு உயர்மட்டக் குழு, தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 2026 நவம்பர் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அந்த உயர்மட்டக் குழு, மத்திய அரசின் இந்த ஆபத்தான நடவடிக்கைகளை நிராகரிக்கும் என்று நம்புகிறேன். இல்லையெனில், இதுபோன்ற மேலும் பல சுற்றுச்சூழல் படுகொலைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இயற்கையான பிளவுகள் மற்றும் விரிசல்களைக் கொண்ட ஆரவல்லி மலைத்தொடர், ஆண்டுதோறும் ஒரு ஹெக்டேருக்கு 20 லட்சம் லிட்டர் (இரண்டு மில்லியன் லிட்டர்) தண்ணீரை நிலத்தடிக்குச் செலுத்தும் திறன் கொண்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தில்லி முதல் குஜராத் வரை பரவியுள்ள இந்த மலைத்தொடர், வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிக முக்கியமான நிலத்தடி நீர் மறுஊட்ட மண்டலமாக விளங்குகிறது.
ஆனால், இந்த மலைத்தொடர் பகுதியில் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுண்ணாம்புக்கல் மற்றும் மார்பிள் போன்ற படிவுப் பாறைகளின் சுரங்கப் பணிகளால், ஆறுகளின் படுகைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலோ அல்லது அவற்றின் மீதோ ஏராளமான கல் குவாரிகளும் கல் உடைக்கும் ஆலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது, ஒரு காலத்தில் ஆரவல்லி மலைத்தொடர் வழங்கிய நீர் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் ராஜஸ்தானின் கோட்புட்லி-பெஹ்ரோர் மற்றும் சிகார் மாவட்டங்களில் சுரங்கத் தொழில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து பிடிஐ செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கத் தூசி எவ்வாறு அங்கு வசிப்பவர்களைக் கொல்கிறது என்பதையும் அது தெளிவுப்படுத்தியிருந்தது.
தில்லி முதல் குஜராத் வரை 650 கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவிற்குப் பரவியுள்ள அரவல்லி மலைத்தொடர், நாட்டின் மிகப் பழமையான மலைத்தொடராகும். இது வடக்கிலிருந்து பாலைவனமாதல் பரவுவதைத் தடுக்கும் இயற்கைத் தடையாகச் செயல்படுவதோடு, பல்லுயிர் பெருக்கத்தையும் நிலத்தடி நீர் செறிவூட்டலையும் பாதுகாக்கிறது.
Senior Congress leader and former environment minister Jairam Ramesh on Sunday claimed that the Aravallis are under the "gravest of threats" by the Modi government's decision
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.