FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 14. ஒழுக்கமுடைமை

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம். அது வீடுபேறு அடைய உதவும் என்பதால், உயிரைவிட மேலானதாகப் போற்ற வேண்டும். ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம்.

Updated On : 17 ஜூன் 2018, 12:00 am IST
பகிர்:

அதிகார விளக்கம்

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம். அது வீடுபேறு அடைய உதவும் என்பதால், உயிரைவிட மேலானதாகப் போற்ற வேண்டும். ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லொழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும், உலகத்துடன் ஒத்திசையும்படி நடப்பவரே கற்றறிந்தவர்.

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

Advertisement

Advertisement

சுயமுன்னேற்றத்துக்கான வரைமுறையால் சுயத்தை அறியலாம். சுயமுன்னேற்றத்துக்கான வரைமுறை, உயிரைவிட சிறந்ததாகக் காக்க வேண்டும். 
 

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

ஒழுக்கத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். சுயமுன்னேற்றத்துக்கான வரைமுறையைப் புரிந்துகொண்டு நடப்பவருக்கும் அதுவே துணையாக இருக்கிறது.

133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். ஒழுக்கமின்மை (இழுக்கம்) பிறப்பையே அசிங்கப்படுத்திவிடும். 

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பார்ப்பானுக்கு நினைவிழந்து போனாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பிறப்பொழுக்கம் அற்றுப்போனால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. 

அழுக்கு மனம் உள்ளவனின் வளர்ச்சியில்லா தன்மைபோல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு வளர்ச்சியில்லை. 

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. 

ஒழுக்கத்தில் தவறாதவர்கள் உயர்ந்தவர்கள். அவர்கள் இழுக்கத்தின் அவல நிலை அறிந்துள்ளார்கள். 

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

ஒழுக்கத்தால் உன்னதமான நிலையை அடைவார்கள். இழுக்கத்தால் இதுவரை இல்லாத பழி வரும். 

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்.

நன்றியுணர்வுக்கு வித்தாக நல்லொழுக்கம் அமையும், தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்.

139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கமானவர்கள் தீமையானவற்றை தவறியும் வாயால்கூட சொல்வதில்லை.

140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உலக மனிதர்களுடன் ஒத்திசைவு கொள்ள கற்காதவர், பல துறை அறிவுபெற்றும் அறிவில்லாதவரே.

குறிப்பு

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments