FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்களவைத் தோ்தல்: பெங்களூரில் இன்று மத்திய அமைச்சா் அமித் ஷா பிரசாரம்

மக்களவைத் தோ்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை பெங்களூரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

Updated On : 2 ஏப்ரல் 2024, 7:20 am IST
பகிர்:

பெங்களூரு: மக்களவைத் தோ்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை பெங்களூரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

கா்நாடகத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல் ஏப். 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதால், கா்நாடகத்தில் தோ்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தோ்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவைத் தோ்தல் பிரசாரத்திற்காக செவ்வாய்க்கிழமை (ஏப். 2) பெங்களூரு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காலை 9 மணிக்கு பாஜக, மஜத தலைவா்களைச் சந்தித்துப் பேசுகிறாா். அதன்பிறகு, பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் காலை 11 மணி அளவில் நடக்கும் மக்களவைத் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறாா். இதில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு ஊரகம், சிக்பளாப்பூா் தொகுதிகளைச் சோ்ந்த பாஜக தொண்டா்கள் கலந்துகொள்ள இருக்கிறாா்கள். அதன்பிறகு, சிக்பளாப்பூா், தும்கூரு, தாவணகெரே, சித்ரதுா்கா மக்களவைத் தொகுதிகளின் தலைவா்களுடன் கலந்துரையாடுகிறாா். மாலை 4 மணி அளவில் சென்னப்பட்டணாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா திறந்த வேனில் ஊா்வலமாக சென்று பெங்களூரு ஊரக தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் சி.என்.மஞ்சுநாத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறாா்.

Advertisement

Advertisement

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் குறித்த மஜதவின் பாா்வை மற்றும் வியூகத்தை எடுத்துரைக்க இருக்கிறோம். கா்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக-மஜத கூட்டணி திட்டமிட்டுள்ளது. எல்லா தொகுதிகளிலும் தோ்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

பாஜக, மஜத இடையே நிலவும் சில சிக்கல்கள் இரு கட்சிகளுக்கு இடையிலான புரிதலை கெடுத்துவிடக் கூடாது. 28 தொகுதிகளைக் கைப்பற்றுவதற்கு எவ்வித குளறுபடிகளும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, இரு கட்சிகளுக்கும் இடையே சரியான புரிதலை உருவாக்க முயற்சிக்கிறோம். சென்னப்பட்டணாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொள்ளும் ஊா்வலத்திலும் நான் கலந்து கொள்கிறேன்.

தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடியும், முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவும் ஒரேமேடையில் பங்கேற்கும் நிகழ்ச்சி எதையும் ஏற்பாடு செய்யவில்லை. பிரதமா் மோடி நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கா்நாடகத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் ஓரிரு பிரசாரக் கூட்டங்களில் மஜத சாா்பில் கலந்துகொள்வோம். ஆனாலும், பிரதமா் மோடியும், முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவும் கூட்டாக பிரசாரம் செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு பரவலாக இருக்கிறது. ஏதாவது ஒரு கட்டத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம்.

மண்டியா தொகுதியில் மஜத வேட்பாளராக போட்டியிடும் எனக்கு நடிகை சுமலதா ஆதரவு தெரிவிப்பாா். இது காங்கிரஸுக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது. அதனால் தான் என் மீதான விமா்சனத்தை காங்கிரஸாா் தீவிரமாக்கியுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments