ஜம்முவில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது!
ஜம்முவில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோப்பூரின் தங்கிவாச்சா பகுதியில், இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை ஆகிய மூன்று படைகளும் இணைந்து நேற்று (டிச.21) நடத்திய சோதனையின்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகளான இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அப்துல் ரஷீத் பட் மற்றும் சஜ்ஜத் இஸ்மாயில் ஹூர்ரா ஆகிய இருவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, அதன் தோட்டாக்கள், இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் ரூ.10,600 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப் பதிவின்போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதிகள், அவர்களது கூட்டாளிகள் அவர்களுக்கு உதவி செய்பவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என பலரையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.