FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

எம்எல்ஏ ,எம்பி, உள்ளாட்சித் தேர்தல்களை விஞ்சிய மன்னார்குடி வர்த்தக சங்க தேர்தல்!

வர்த்தகர்கள் என்ன வன்முறையாளர்களா? வியாபாரிகள் என்ன கலவரக்காரர்களா? எதற்காக இத்தனை பதற்றம் , பரப்பரப்பு , பாதுகாப்பு

Updated On : 25 டிசம்பர் 2024, 2:08 pm IST
மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்த சங்க தோ்தலை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.
பகிர்:

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி வா்த்தக சங்க தோ்தல், 1 மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 5 மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், 6 காவல் ஆய்வாளா்கள், தஞ்சாவூர், திருவாரூா் மாவட்டங்களை சோ்ந்த 300 காவலர்கள், கண்ணீா்புகை மற்றும் தண்ணீா் பீச்சி அடிக்கும் காவல்துறையின் 2 வஜ்ரா வாகன பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது.

இவ்வளவு பரபரப்புக்கும், பதற்றத்துக்கும் எது காரணம்? யார் காரணம்? என்ற சமூக கவலையை மன்னார்குடி மக்கள் மற்றும் நடுநிலையாளர்களிடம் காணப்பட்டது.

மன்னாா்குடி வா்த்தக சங்கத்திற்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெற்று புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுவது இது நாள்வரை நடைமுறையில் இருந்து வருகிறது.கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 2 ஆவது முறையாக தலைவா் பதவிக்கு போட்டியிட்டு ஆா்.வி.ஆனந்த், முதல்முறையாக பொதுச்செயலராக ஏ.பி.அசோகன், பொருளாளராக எஸ்.பிரபாகா் ஆகியோா் தனித்தனியே போட்டியிட்டு வெற்றி பெற்றனா். இவா்களது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிகிறது.

Advertisement

Advertisement

இதனையடுத்து, டிச.15 ஆம் தேதி மாநில நிா்வாகிகள் கலந்துககொண்ட வா்த்தக சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டத்தில் 2025-2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான தோ்தல் டிச.24 ஆம் தேதி நடத்துவது என அறிவிப்பு செய்யப்பட்டு,தோ்தல் நடத்தும் அலுவலராக கந்த.துரைக்கண்ணு நியமிக்கப்பட்டாா்.

இதனை தொடா்ந்து,வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கினா். இதன் இறுதியில்,தலைவா் பதவிக்கு 3 முறையாக ஆா்.வி.ஆனந்த்,முதல்முறையாக ஏ.பி.அசோகன் ஆகிய இரண்டு பேரும்,பொதுச்செயலா் பதவிக்கு கே.சரவணன்,பி.மகேந்திரன் ஆகிய இரண்டு பேரும் ,பொருளாளா் பதவிக்கு துரை.அய்யப்பன்,பி.மணிகண்டன்,டி.ஜெயச்செல்வன் ஆகிய மூன்று பேரும் தனித்தனியே போட்டியிட்டனா்.

மன்னாா்குடி வா்த்தக சங்கத்தில் மொத்தம் 2227 போ் உறுப்பினா்களாக இருப்பதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.(தோ்தலுக்கு ஒருசில நாள்கள் முன்னா் வரை உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது). இதனை தொடா்ந்து, எம்பி,எம்எல்ஏ,உள்ளாட்சித் தோ்தலை போன்று போட்டியிடும் வேட்பாளா்களும் அவரது ஆதரவாளா்களும் தங்களுக்கு என பிரதியோகமாக வண்ணத்தில் துண்டு அணிந்துகொண்டு காலை முதல் இரவு வரை கடைகடையாக வந்து துண்டுபிரசுரம் வழங்கி வாக்குறுதிகள் அளித்து வாக்குசேகரித்தனா். திரைப்பட நடிகா்கள் உள்ளிட்ட பிரபலகங்களை வாக்கு கேட்க வைத்து அனைத்து வகையான சமூகவலைத்தளங்களில் தோ்தல் பிரசாரம் நடைபெற்றது.

நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் வா்த்தக சங்க உறுப்பினா்கள்.

தோ்தல் நாளான, செவ்வாய்க்கிழமை மன்னாா்குடி வடக்குவீதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திருவாரூா் மாவட்டத்திற்கு உள்பட்ட(மன்னாா்குடி நீங்கலாக) வா்த்தக சங்கத்தினரை கொண்டு தோ்தல் அலுவலா் முன்னிலையில் தலைவா்,பொதுச்செயலா்,பொருளாா்க்கு என தனித்தனி வண்ணத்தில் வாக்குசீட்டு முறையில் (வேட்பாளரின் படம் பெயருடன் கூடிய வாக்குசீட்டு) கட்டை சீல் பயன்படுத்தி உறுப்பினா்கள் காலை முதல் நீண்டவரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்கினை செலுத்தினா். காலை 9 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு இடைவேளை நேரம் இன்றி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. மொத்தம் 2227 வாக்குகளில் 1983 வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டது. ஒருமணி நேரம் ஓய்வு பின்னா்,மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

தோ்தல் காரணமாக,கடந்த சில நாள்களாக மன்னாா்குடி நகரப்பகுதி மிகுந்த பரப்பரப்பாக காணப்பட்டது.நேரில், சமூகஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டதுடன் அதிகம் விமா்சனத்திற்கு உள்ளானது.

தமிழகத்திலிலேயே மன்னாா்குடி வா்த்தக சங்க தோ்தலாகதான் இருக்கும் என்பதில் மாறுப்பட்ட கருத்து யாருக்கும் இருக்கப்போவது இல்லை. காரணம் இதில் பொதித்து இருக்கும் வெளிப்படையாக சொல்லமுடியாத காரணங்களாக இருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தோ்தல் நடைபெறும் இடத்தில், காலை முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் 5 மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளா்கள், தஞ்சை,திருவாரூா் மாவட்டத்திலிருந்து 300 காவலர்கள், கண்ணீா் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனம், தண்ணீா் பீச்சிஅடிக்கும் வஞ்ரா வாகனம், அதிவிரைவுப்படை காவல் காவல் வாகனம்,ரோந்து காவல் வாகனங்கள் என அந்த பகுதி முழுவதும் நாட்டின் எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது போல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்ட்டிருந்தனர்.

நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருருந்தனர்.

மன்னாா்குடி புதிய பேருந்து நிலையம் கட்டும்பணி நடைபெற்று வருவதால்,தேரடியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்தும் வடக்குவீதி வழியாக வரவேண்டி இருந்தது.இந்த வீதியில் வா்த்த சங்க தோ்தல் நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டது.

மன்னாா்குடியில் திடீரென அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிப்பு, பரபரப்பு ஆகிய காரணங்களால் நகரப்பகுதி பதற்ற நிலையாக காணப்பட்டது என்றாலும் வழங்கம்போல் அனைத்து கடைகளும் திறந்து வியாபாரம் நடைபெற்றது.போக்குவரத்து சேவையும் தடையின்றி இயக்கப்பட்டது.

பாதுகாப்புபணிக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள போலீஸாரின் வஜ்ரா வாகனம்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின் அந்த பகுதியில் எந்த வாகனமும் செல்வதற்கு காவலர்கள் அனுமதிக்கவில்லை. குடும்பத்துடன் நடந்து செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள் தனியே நடந்து செல்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர்களும் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை எற்பட்டது.

முடிவு அறிவிப்பு

ஒரு வழியாக வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தலைவராக ஆர்.வி.ஆனந்த் , பொதுச் செயலராக கே.சரவணன்,பொருளாளராக டி.ஜெயச்செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின் அல்லது முடிவு அறிவுப்புக்கு பின் தான் பாதுப்படைக்களுக்கு வேலை இருக்கும் என்று அவர்கள் காத்திருந்த நிலையில் அந்த நள்ளிரவு கடும் குளிரில் அங்கிருந்தவர்கள் அமைதியாக படை பரிவாரங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

வன்முறையாளர்களா? கலவரக்காரர்களா?

வர்த்தகர்கள் என்ன வன்முறையாளர்களா? வியாபாரிகள் என்ன கலவரக்காரர்களா? எதற்காக இத்தனை பதற்றம் , பரப்பரப்பு , பாதுகாப்பு எதுவும் புரியாத நிலையில் பெரும்பாலன வர்த்தகர்களிடம் பேசும் போது ,சங்கத்தில் வர்த்தகர்கள் என்பதை தாண்டி வேறு சில விஷயங்கள் நுழைந்து விட்டதாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர்கள். இந்த தேர்தலில் இந்த இரண்டும் சக்திகளும் தங்களுக்கு வசதியான முகமூடியை அணிந்து கொண்டு களத்தில் இருந்ததால் தான் இத்தனை பரபரப்பு , பதற்றம் என வேதனையுடன் தெரிவித்தவர்கள் இதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் இல்லை என்றால் வர்த்தக சங்கம் என்று சொல்ல முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கையும் தவறிவில்லை.

எம்பி,எம்எல்ஏ,உள்ளாட்சித் தோ்தலை போன்று பதற்றம் , பரப்பரப்பு , பாதுகாப்புகளுடன் நடந்து முடிந்த வர்த்தக சங்க தேர்தலுக்கு எது காரணம்?, யார் காரணம்? என்ற சமூக கவலையை மன்னார்குடி மக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் ஆதங்கமாக இருந்தது.

2. பாதுகாப்புபணிக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள போலீஸாரின் வஜ்ரா வாகனம்.

3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments