முகப்பு
தற்போதைய செய்திகள்

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

பிரிட்டன் நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 4 மார்ச் 2025, 9:40 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பிரிட்டன் ராஜ்ஜியதில் இஸ்லாமிய பாரம்பரிய மாதத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு டிக்டாக் நிறுவனம் நிதியுதவி வழங்கியதற்கு உய்குர் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டில் முஸ்லிம் வுமன்ஸ் நெட்வொர்க் எனும் அமைப்பினால் பிரிட்டனில் இஸ்லாமியர்களின் கலாச்சார பங்களிப்பை கொண்டாடும் விதமாக பலதரப்பட்ட சமூகத்தினர், படைப்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்டாக் செயலி நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு பிரிட்டனில் வாழும் சீனாவைச் சேர்ந்த உய்குர் இஸ்லாமிய சமூகத்தினர் தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிரான அந்நாட்டு அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பான காட்சிகளையும் விடியோக்களையும் டிக்டாக் செயலியில் பகிர்வதற்கு அந்நிறுவனம் தணிக்கை செய்து தடைவிதிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், தற்போது பிரிட்டனில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் டிக்டாக் செயலியின் ஈடுபாட்டை பல்வேறு அமைப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பேச்சுவார்த்தையில் மோதல்! தவிர்த்துக் கடந்த ஸெலென்ஸ்கி; விடாமல் தொடரும் வெள்ளை மாளிகை!

இதனை முற்றிலுமாக மறுத்துள்ள டிக்டாக் தகவல் தொடர்பு குழுவின் உறுப்பினரான நிகோலஸ் சிமித் கூறுகையில் உய்குர் தொடர்பான விவகாரத்தில் டிக்டாக் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டானது முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஜின்ஜியாங்கில் உய்குர் சமூகத்தினருக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்துள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியில், உய்குர் மக்களுக்கு விதிக்கப்படும் தடுப்புக்காவல், கட்டாய உழைப்பு, கட்டாய கருத்தடை, கலாச்சார மற்றும் மத நடைமுறைகளை அடக்குதல் போன்ற சீனாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால், சீன அரசாங்கம் இந்த நடவடிக்கைகள் அனைத்து அந்நாட்டு தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.