முகப்பு
செய்திகள்

மனைவியின் பற்கள் கோணலாக இருப்பதால் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவன்!

கோணல் பற்களுடன் இருக்கும் அவளோடு இனி என்னால் வாழவே முடியாது’ என்று கூறியதோடு... மேற்கொண்டு அதிக வரதட்சிணையோடு உங்கள் பெண்ண அனுப்பினால் ஏற்றுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் முத்தலாக் சொல்லி

Updated On : 1 நவம்பர், 2019 at 12:07 PM
rukshana begam
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 4:05 PM

ருக்‌ஷானா பேகத்திற்கும், முஸ்தபாவிற்கும் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் நாள் திருமணமானது. முழுதாக 5 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் திடீரென முஸ்தபா தன் மனைவிக்கு முத்தலாக் அளித்து விவாகரத்து கோரியிருக்கிறார். இந்நிலையில் ருக்‌ஷானா பேகம், கடந்த அக்டோபர் 31 ஆம் தேதியன்று தன் கணவரும், மாமனார், மாமியாரும் வரதட்சிணை கேட்டு தன்னை அடித்துக் கொடுமைப் படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை ருக்‌ஷானாவின் கணவர் முஸ்தபா மற்றும் அவரது பெற்றோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), வரதட்சணைச் சட்டம் மற்றும் முத்தலாக் சட்டத்தின் 498 ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

ருக்‌ஷான பேகத்தின் வழக்கு குறித்துப் பேசும் போது குசைகுடா பகுதியின் வட்டார ஆய்வாளரான கே சந்திரசேகர் தெரிவித்தது என்னவென்றால், ருக்‌ஷானா பேகத்தின் சார்பில் எங்களுக்கு ஒரு புகார் வந்தது. அவர் தனது பற்கள் கோணலாக இருப்பதாகக் கூறி தன் கணவர் தனக்கு முத்தலாக் அளித்து விட்டதாகவும், அதைத் தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அதில் தெரிவித்திருந்தார். இவர்களது திருமணத்தின் போதே ருக்‌ஷானாவின் பெற்றோர் முஸ்தபா குடும்பத்தினருக்கு ஏகப்பட்ட வரதட்சிணையை நகைகளாகவும், பணமாகவும் அளித்திருந்தனர். அவர்கள் கேட்ட சீர்வரிசைகளை எல்லாம் முறையாகக் கொடுத்த பின்பும் கூட ருக்‌ஷானாவிற்கு புகுந்த வீட்டில் சந்தோஷமோ, நிம்மதியோ துளியும் கிடைக்கவில்லை. திருமண நாள் முதலே அவருக்கான சோதனைகள் தொடங்கி விட்டன. மாமியார், மாமனார், கணவர் என மூவரும் கூட்டு சேர்ந்து கொந்து ருக்‌ஷானாவைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். திருமணத்தன்று அளித்த வரதட்சிணை போதாது, கோணலான பற்கள் கொண்ட ஒரு பெண்ணை எங்கள் தலையில் கட்டிவிட்டு உன் பெற்றோர் நிம்மதியாக இருப்பதா? மேலும் பணமும், நகையும் கொண்டு வா. அப்போது தான் உன்னால் இங்கே நிம்மதியாக வாழ முடியும் என்று அச்சுறுத்தி இருக்கின்றனர். 

இதற்கிடையில் ருக்‌ஷானாவின் சகோதரர் வைத்திருந்த பைக்கை முஸ்தாபா வலிந்து தனதாக்கிக் கொண்டுள்ளார். இதை அவர்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. அது மட்டுமல்ல, அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் ருக்‌ஷானா முரண்டு பிடித்தால், குறைந்தது 10 முதல் 15 நாட்கள் வரை வீட்டிற்குள் ஒரு அறையில் அந்தப்பெண்ணை அடைத்து வைத்து யாருடனும் பேச விடாமல் சிறை வைக்கவும் அவர்கள் தயங்கியதில்லையாம்.

Advertisement

இந்நிலையில் வீட்டுச்சிறைவாசத்தின் போது ருக்‌ஷானாவுக்கு உடல்நிலை சீர்கெடவே, முஸ்தபா குடும்பத்தார், அவருக்கு சிகிச்சை அளித்துப் பார்த்துக் கொள்ள விருப்பமின்றி, அவரைத் தாய் விட்டிற்குச் செல்ல அனுமதித்திருக்கின்றனர்.அதன் படி கடந்த அக்டோபர் 1 அன்று தாய்வீட்டில் விடப்பட்ட ருக்‌ஷானாவை மீண்டும் வந்து முஸ்தபா அழைத்துச் செல்லவில்லை. தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு ருக்‌ஷானா கேட்டுக் கொண்டதற்கு, சினந்து பொங்கிய முஸ்தபா கடுமையாக மனைவியை ஏசியதோடு அல்லாமல் தொலைபேசி வாயிலாக மாமனார், மாமியாரையும் அழைத்து அவர்களையும் கடுமையாகத் திட்டி ஃபோனிலேயே முத்தலாக் சொல்லி, எனக்கு உங்கள் பெண்ணைப் பார்க்கவே பிடிக்கவில்லை, சகிக்க முடியாத கோணல் பற்களுடன் இருக்கும் அவளோடு இனி என்னால் வாழவே முடியாது’ என்று கூறியதோடு... மேற்கொண்டு அதிக வரதட்சிணையோடு உங்கள் பெண்ண அனுப்பினால் ஏற்றுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் முத்தலாக் சொல்லி அவளை விவாகரத்துச் செய்து விடுகிறேன். என்றும் அச்சுறுத்தியிருக்கிறார்.

இதையடுத்து தான் ருக்‌ஷானா பேகம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, தன் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது வரதட்சிணைப் புகார் அளித்த சம்பவம் நடந்தேறியது.

கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வரதட்சிணை வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், எனக்கு நீதி கிடைக்கும் வரை என்னால் அவர்களை இந்த வழக்கை வாபஸ் பெற முடியாது. என் கணவர் வீட்டார், என்னிடம் சமரசம் பேச முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களது பணத்தாசை என்னை நிம்மதியாக வாழ விடாது. எனவே முதலில் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்கிறார் ருக்‌ஷானா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.