FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

காதலாகி கசிந்துருகி அதீதமாக உணர்ச்சிவசப்படுபவரா நீங்கள்? கடக லக்னத்தில் பிறந்த உங்களின் குணம் இதுதான்!

இந்த ராசிக்காரர்கள் நீரைப் போல ஸ்திரத்தன்மை அற்றவர்கள். ஆனால் இரும்பைப் போல உறுதியான மனம் உள்ளவர்கள்.

Updated On : 26 பிப்ரவரி 2018, 12:36 pm IST
பகிர்:

இந்த ராசிக்காரர்கள் நீரைப் போல ஸ்திரத்தன்மை அற்றவர்கள். ஆனால் இரும்பைப் போல உறுதியான மனம் உள்ளவர்கள். இந்த ராசிக்கு சொந்தக்காரனான சந்திரன், வளர்ந்தும் குறைந்தும் மீண்டும் வளரவும் கூடியவன் என்பதால் அதே போல இந்த ராசிக்காரர்களின் மனத்தை அலைபாயச் செய்யக் கூடிய மனோகாரகன். எனவே கடக ராசியில் பிறந்த நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.

மனிதன் இந்த உலகத்தில் சிறப்புடன் வாழ்வதற்கு அவனுடைய மனம் பக்குபட்டிருக்க வேண்டும். ஞானம் அடைந்திருக்க வேண்டும். அதனால் கடக ராசியில் பிறந்த நீங்கள், உங்கள் பிறந்த நேரத்தின் போது சந்திரன் எப்படி அமைந்திருக்கின்றானோ அந்த ஸ்தான பலத்துக்கு ஏற்ப உங்கள் மனம் செயல்படும். ரூபம், ரஸம், கந்தம், சப்தம், ஸ்பர்சம் என்ற ஐந்து விஷயங்களில் ரஸத்துக்கு அதாவது அனுபவித்து ரசிக்கும் திறனுக்குச் சந்திரன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரஹங்களும் காரணம். கடக ராசிக்காரர்களாகிய நீங்கள் பெரும் ரசனைக்காரர்கள். வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கவே நினைப்பீர்கள்.

உடல் உறுப்புகளில் மார்பு பாகத்தையும் வயிற்றையும் கடக ராசி அடக்கியாள்கிறது. பன்னிரு ராசிகளில் இது மிக மிக உணர்ச்சிகரமான ராசி. வீடு, குடும்பம், சமூகம் ஆகிய துறைகளில் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ளதால் இம்மூன்று துறைகளையும் ஆள்கிறது. இந்த ராசியில் நீங்கள் பிறந்திருந்தால் குடும்பப் பிரச்னைகள் உங்களுக்கு அடிக்கடி நேரும். அந்தப் பிரச்னையை தீர்க்கவும் உங்களால் முடியும். நண்டு எந்தப் பொருளையும் தன் கூரிய நகத்தை விரித்துப் பிடித்துக் கொள்ளத்தான் மெதுவாக செயல்படுமே தவிர, பிடித்துக் கொண்டபின் லேசில் விடாது. போலவே நீங்களும். ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் அதில் வெற்றிக் கிடைக்கும் வரை விடாப்பிடியாக இருப்பீர்கள்.

Advertisement

Advertisement

உங்களுக்கு யானை போல நினைவுத் திறன் அதிகமுண்டு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முக்கியமானவற்றை மறக்கவே மாட்டீர்கள். நீங்கள் கடந்த காலச் சம்பவங்களை நினைத்துப் பார்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். வாழ்நாள் முழுவதும் அது நினைவிருந்தாலும் மன்னிக்கும் குணமும் உங்களுக்கு உண்டு.  

நீங்கள் ஒரு முடிவை எளிதில் எடுக்க மாட்டீர்கள். அதனால் சில பிரச்னைகளையும் சந்திப்பீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாங்கு உங்களிடம் இருக்காது. உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை பாதிக்கும் விஷயமானால் உங்கள் மனத்தைப் போட்டு வருத்திக் கொள்வீர்கள். 

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். புதியவர்களிடம் பழகும் போது உங்களால் உடனடியாக அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களிடம் சில தயக்கங்கள் இருக்கும். ஆனால் பழகிவிட்டால் அவர்களை மிக நெருக்கமாக நினைக்கச் செய்துவிடுவீர்கள். உங்களுடைய பிரச்னையே மனத்தடைகள் தான். அதிலிருந்து மீண்டு வந்தால் உங்களால் எதையும் சாதிக்கும் திறன் அதிகமிருக்கும். அன்பு செலுத்துவதிலும்,கருணை காட்டுவதிலும் பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவர்களாகவும் இருப்பீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள்

இந்த ராசியில் பிறந்த பெண்களாக இருந்தீர்கள் எனில் வசீகரிக்கும் ஈர்ப்பு சக்தி உங்களிடம் இருப்பது தெரிந்திருக்கும். மந்திரம் மாயம் போன்றவற்றில் ஈடுபட விரும்புவீர்கள். அடிக்கடி கற்பனையில் மூழ்கிவிடுவீர்கள்.  குடும்பத்தின் மீது அதிக பாசம் உடையவராக இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள், அல்லது நீங்கள் அப்படி நடக்கச் செய்வீர்கள். திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர் நீங்கள். மரபு சிந்தனைகள் இருந்தாலும், நவீனமான கருத்துக்களும் துணிச்சலும் உடையவர்களாக இருப்பீர்கள். காதலுணர்வு மிகுந்தும், ரசிகத் தன்மையுடனும் இருப்பீர்கள். சிக்கனம் இல்லாமல் எதையும் நிறையச் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைப்பீர்கள்.

அமைதியாக, அதே சமயம் அழுத்தமானவர்களாக இருப்பீர்கள். உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கும். மென்மையாக உங்கள் கருத்துக்களைச் சொன்னாலும் ஆணித்தரமாகச் சொல்வீர்கள். நினைத்ததை சாதிக்கும் வரை ஓயமாட்டீர்கள். வீட்டில் உங்கள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். கணவனாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் உங்கள் பேச்சைக் கேட்டுத் தான் நடக்கும்படி செய்வீர்கள். மிகுந்த ஆளுமைத் திறன் உடைய உங்களால் எளிதில் அடங்கிப் போய்விட முடியாது. 

இந்த ராசியில் பிறந்தவர்களிடம் சாந்த குணம் காண்பது அரிது. காட்டாற்று வெள்ளம் போல உணர்ச்சிக் கடலில் சிக்கி தவிப்பீர்கள். வசை மொழிகளையும், கடுஞ்சொற்களை ஒருபோதும் தாங்க மாட்டீர்கள். பிறருடைய சாதாரண குத்தல் வார்த்தைகள் கூட உங்களின் மனத்தை ஆழமாக பாதித்துவிடும். 

உங்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர். அதிக பணம் சம்பாதிப்பதை விரும்புவீர்கள். சிக்கனமாக செலவு செய்வீர்கள். பணத்தை சேர்த்து வைப்பத் உபோலவே, பிறர் எழுதிய கடிதங்களையும் புத்தகங்களையும் அபூர்வ கலைப் பொருட்களையும் சேர்த்து வைத்திருப்பதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். பழம் பொருட்களின் மீதும், புராதானக் கலை வடிவங்களின் மீதும் உங்களுக்கு அளவற்ற ஆசை இருக்கும். உங்களுக்காகவும் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் வெற்றிக்காகவும் நீங்கள் உழைப்பீர்கள். பதவிக்காக கடின உழைப்பை போடுவீர்கள். கிடைத்த பதவியை தக்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு பேராசை இருக்காது. ஆனால் மற்றவர்கள் உங்களைப் புகழ வேண்டும் என்று நினைப்பீர்கள். நகை மீது பற்று இருக்கும் முக்கியமாக முத்து மாலை, முத்து தோடுகளை ஆர்வமாக வாங்கிக் குவிப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த நிறம் வெள்ளை.

இந்த ராசி வயிற்றுப் பகுதியை ஆள்வதால் பலவித ருசியான உணவுப் பொருள்கள் இந்தப் பாகத்தில் செரிமானம் ஆவதாலும் அநேகமாக ஜீரணக்கோளாறோ வாயு உபத்திரவங்களோ ஏற்படும். உணவு வகையில் கவனமாக நீங்கள் இருக்க வேண்டும். நடுத்தர வயதைக் கடந்த பிறகு வாயு சம்பந்தப்பட்ட உருளை, கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை தவிர்த்துவிட வேண்டும். சாதாரணமாக உடல்நிலை சரியில்லாமல் போனாலும், நீங்கள் ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிவிடுவீர்கள். கவலையும் அதிருப்தியும் உணவுச் செரிமானத்தைப் பாதிக்கும். மலச்சிக்கல், வயிறு உப்புதல், கீழ்வாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே உணவு விஷயத்தில் நீங்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். 

கடக ராசியில் பிறந்த நீங்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவீர்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றிருப்பீர்கள். கையில் பணம் குறைந்தால் உங்கள் முகம் வாடிவிடும். மற்றவர்கள் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கும் உங்களால் துரோகங்களைத் தாங்கவே இயலாது. நீங்கள் கடன் கொடுத்தவர்களிடமிருந்து பேசி மீண்டும் பணத்தை திரும்பப் பெறும் திறன் உங்களுக்கு இருக்காது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கடல் சார்ந்த வேலைகளில் சிறந்து விளங்குவீர்கள். சரித்திரம் சார்ந்த பதிவுகளை துல்லியமாக எழுதும் திறமை உடையவர்களாக இருப்பீர்கள். எழுத்தாளர்கள், மரைன் பொறியாளர்கள், புத்தக வியாபாரிகள், பழைய புத்தகம் விற்பனை செய்பவர்கள், அரசியல்வாதிகள், டெய்லர், உணவு கடை நடத்துபவர்கள், நர்ஸ், ஆயாக்கள், சமையல்காரர்கள், நடிக நடிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகிய துறைகளில் உங்களால் ஜொலிக்க முடியும். எந்த வேலையைச் செய்தாலும் அதை நேர்த்தியாகவும் அழகுணர்வோடும் செய்து முடிப்பீர்கள். மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள்.

உங்களுடைய  ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி என்பதால் தீர்க்காயுள் உங்களுக்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments