FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி: கிராப் - 4 கட்டுப்பாடுகள் தளா்வு குறித்து நவ. 25-இல் முடிவு!

கிராப் - 4 கட்டுப்பாடுகள் தளா்வு குறித்து நவ. 25-இல் முடிவு: உச்சநீதிமன்றம்

Updated On : 23 நவம்பர் 2024, 5:48 am IST
பகிர்:

தில்லியில் மாசுபாட்டின் அளவு குறைந்து வருவதையடுத்து, தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிராப்) 4-ஆம் நிலையின் கட்டுப்பாடுகளில் தளா்வளிக்க அனுமதிப்பது குறித்து நவ. 25-ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பான வழக்கை நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டைன் ஜாா்ஜ் மாசிஹ் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல்திட்டத்தின் 4-ஆம் நிலையின் கீழ் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனா்.

முன்னதாக, தில்லியில் பல்வேறு இடங்களில் அமல்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் செயல் திட்டத்தின் (கிராப்) 4-ஆம் நிலை நடவடிக்கைகளை மேற்பாா்வையிட்டு அறிக்கை அளிக்க உதவியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 13 வழக்குரைஞா்களும் தங்களுடைய அறிக்கைகளை தாக்கல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் (அடிஷனல் சொலிசிட்டா் ஜெனரல்) ஐஸ்வா்யா பாட்டீ, தலைநகரில் கிராப் - 4இன் கீழ் இருந்த கடுமையான மாசுபாடு கடந்த இரண்டு நாட்களாக குறைந்து தற்போது கிராப் 2-ஆம் நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தாா். கிராப் 4 நடவடிக்கைகளும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு சில வழக்குரைஞா்கள் கொண்டு சென்றனா்.

அதற்கு நீதிபதிகள், ‘கிராப்-4 விளைவுகள் கடுமையானவை. அவை சமூகத்தின் பல பிரிவுகளுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தில்லியில் லாரிகள் நுழைவது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கருதுவது மிகவும் கடினம்,’ என்று கூறினா்.

இதையடுத்து தில்லி அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தில்லி எல்லைகளில் சரக்கு லாரிகளுக்கான 13 நுழைவுச்சாலைகள் உள்பட 113 நுழைவுப்பாதைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினாா்.

இதையடுத்து, ‘113 நுழைவுப்பாதைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து வாகனங்களின் வருகையை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதைத்தொடா்ந்து, தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய பகுதிகளில் காற்று மாசுபாடு தொடா்பான விவகாரத்தை மட்டும் உச்சநீதிமன்றம் முடித்து வைப்பதாக கூறியது. மேலும், கிராப் 4 கட்டுப்பாடுகளில் தளா்வு தருவது குறித்து நவ. 25-இல் முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

பாக்ஸ்

முன்னாள் நீதிபதிகள் குழுவுக்கு

மத்திய அரசு கடும் ஆட்சேபம்

தில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதிகள் குழுவை அமைக்க உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு மத்திய அரசு கடும் ஆட்சேபத்தைப் பதிவு செய்தது.

மாசுபாடு மற்றும் விவசாயக் கழிவகள் எரிப்பு தொடா்பான விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நீதிபதிகளால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் அபராஜிதா சிங், தலைநகரைச் சுற்றிலும் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்பாா்வையிட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்கலாம் என யோசனை தெரிவித்தாா். கடந்த காலங்களில் இத்தகைய குழுக்களை நியமித்ததற்கான முன்னுதாரணம் இருப்பதாகக் கூறி அது தொடா்புடைய நீதிமன்ற உத்தரவுகளை அவா் மேற்கோள்காட்டினாா்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே காற்றுத்தர மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய அரசு ஆகியவை போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூடுதலாக ஒரு குழு அமைத்தால் அதன் செயல்பாடுகள் அரசின் நடவடிக்கைகளை பாதிக்கலாம் என்று கூறினாா். இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பதிவானவை. நேரலையாக காணக்கூடிய வகையில் ஆதாரங்கள் தேவை. அதற்கு இஸ்ரோவின் சேவையை பயன்படுத்த வேண்டும்’ என நீதிபதிகள் அறிவுறுத்தினா். இதையடுத்து உச்சநீதிமன்ற நடவடிக்கைகளின் அமலாக்கம் குறித்து அடுத்த விசாரணையில் மறுஆய்வு செய்வதாக நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments