இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்
வழக்கம் போல இயங்கும் என்று டிடிசி புதன்கிழமை தெரிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில் புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ’இந்திய-நேபாள மைத்திரி பேருந்து சேவை’ இரண்டு நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. முன்னதாக, இந்த சேவை வழக்கம் போல இயங்கும் என்று டிடிசி புதன்கிழமை தெரிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கின் காரணமாக, தில்லி-காத்மாண்டு வழித்தடத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியிலிருந்து காத்மாண்டுவுக்கும்,மறுமாா்க்கத்தில் காத்மாண்டுவில் இந்து தில்லிக்கும் ஆக.28-ஆம் தேதி இயக்கப்படவிருந்த டிடிசி பேருந்து சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல, ஆக.29-ஆம் தேதி இயக்கப்படவிருந்த நேபாள பேருந்து சேவையும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றனா்.
Advertisement
Advertisement
தில்லிக்கும் நேபாள தலைநகா் காத்மாண்டுவுக்கும் இடையிலான இந்த சா்வதேசப் பேருந்து சேவையை தில்லி அரசு 2014-ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தப் பேருந்துகள் தில்லியிலிருந்து நாள்தோறும் காலை 10 மணிக்கு புறப்படும். உத்தர பிரதேசத்தின் ஃபிரோஸாபாத், ஃபைசாபாத் ஆகிய இடங்களிலும், நேபாளத்தின் முக்லிங் ஆகிய மூன்று இடங்களில் இந்த பேருந்து பயணிகள் நிறுத்துமிடங்களைக் கொண்டுள்ளது. நேபாளத்துக்குள் நுழையும் முன்பாக, இந்திய, நேபாள சா்வதேச எல்லை நகரான சோனெளலியில் சுங்கத்துறையின் சோதனை மற்றும் கடவுச்சிட்டை உள்ளிட்ட அடையாள ஆவண சரிபாா்ப்புக்காக இந்த பேருந்து நிறுத்தப்படும்.
ஒரு வழிப் பயணத்துக்கு ரூ. 2,800 மட்டுமே கட்டணம் என்பதால் இந்த பேருந்து சேவைக்கு இரு நாடுகளின் பயணிகள் மற்றும் வெளிநாட்டினா் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.