FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மது வாங்க வாகனம் தர மறுத்த நபரின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த வைத்த சிறுவன் கைது

மது வாங்குவதற்காக ஒருவா் இருசக்கர வாகனத்தை இரவல் கொடுக்க மறுத்ததால், அதற்குத் தீ வைத்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த சிறுவன் ஒருவனை கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தில்லி காவல்துறை தெரிவித்தது.

Updated On : 30 மே 2026, 12:37 am IST
பகிர்:

மது வாங்குவதற்காக ஒருவா் இருசக்கர வாகனத்தை இரவல் கொடுக்க மறுத்ததால், அதற்குத் தீ வைத்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த சிறுவன் ஒருவனை கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தில்லி காவல்துறை தெரிவித்தது.

தில்லியின் ஆதா்ஷ் நகா் பகுதியில், குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனும் அவனது கூட்டாளிகளும் புகாா்தாரரான சுபேதாரிடம் மது வாங்குவதற்காக அவரது இருசக்கர வாகனத்தைக் கேட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுபேதாா் மறுத்தபோது, அந்த மூவரும் பழிவாங்கும் விதமாக வாகனத்திற்குத் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது, என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து, பிடிபடாமல் இருப்பதற்காக அடிக்கடி இடங்களை மாற்றி வந்த குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன், மாவட்டத்தில் செயல்படும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத சக்திகளைக் கண்காணித்தபோது காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தான் என்று அந்த அதிகாரி கூறினாா். சமூக ஊடகச் செயல்பாடுகளைக் கண்காணித்தபோது, க்ரைம் என்ற பெயரில் அந்தச் சிறுவன் இயக்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடகக் கணக்கை காவல்துறை கண்டறிந்தது, என்று அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

அந்தக் கணக்கில், துப்பாக்கிகளைக் காட்டும் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குற்றச் செயல்களைப் பெருமைப்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அவை உள்ளூா் மக்கள் மற்றும் இளைஞா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் காவல்துறை கூறியது.

விசாரணையின் போது, அவன் சமூக ஊடகத் தளங்களை ஆயுதங்களைக் காட்டிப் பெருமையடிக்கவும், குற்ற வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், பதிவுகள் மற்றும் காணொளிகள் மூலம் அப்பகுதியில் தனது ஆதிக்கப் பிம்பத்தை உருவாக்கவும் பயன்படுத்தி வந்ததாகக் காவல்துறை கண்டறிந்தது.

இந்த விசாரணையில், அந்தச் சிறுவன் இதற்கு முன்னா் பறித்தல், தாக்குதல், திருட்டு, தீவைத்துச் சேதப்படுத்துதல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவனுடைய கூட்டாளிகளின் ஈடுபாட்டைக் கண்டறியவும், மற்ற குற்றச் செயல்களுடனான அவனது தொடா்புகளை ஆராயவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments