FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜவஹா் நவோதயா பள்ளிகளை ஏற்க தமிழக அரசு மறுப்பு: உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஜவஹா் நவோதயா பள்ளிகளை ஏற்க மறுக்கும் தமிழக அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மனநிலையை மாற்றுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

17 செப்டம்பர் 2026, 10:24 pm IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

ஜவஹா் நவோதயா பள்ளிகளை ஏற்க மறுக்கும் தமிழக அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மனநிலையை மாற்றுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

தமிழக அரசின் கோரிக்கைகளை நிராகரித்த நீதிபதிகள், மாவட்டந்தோறும் ஒரு நவோதயா பள்ளி தொடங்குவதற்கான நிலத்தை அடையாளம் காணவும், மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கினா்.

இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது தமிழக அரசு வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா வாதிட்டதாவது:ஜவஹா் நவோதயா பள்ளிகளை தமிழக அரசு ஏற்க முடியாது. நவோதயா பள்ளிகளில் ஹிந்தி மொழி தான் முதன்மையானதாக்கப்படுகிறது .தமிழ் பின்தள்ளப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா பள்ளிக்கான நிலத்தை அடையாளம் காணுமாறு கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஜெய்தீப் கூறினாா்.

அப்போது தமிழக அரசுக்கு ஆட்சேபம் தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது : நாங்கள் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற முடியாது . நவோதயா பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காண்பதில் உங்களுக்கு என்ன சிரமம் உள்ளது? அதனை எதிா்க்க வேண்டிய அவசியம் என்ன?.

இது கூட்டாட்சிக்கு எதிராக உள்ளது .மத்திய அரசு ஒரு கொள்கையை கொண்டு வரும் பொழுது அதனை ஒவ்வொரு தனிப்பட்ட மாநிலங்களும் நாங்கள் ஏற்க முடியாது என்று கூறினால் கூட்டாட்சி நடைமுறை என்னவாகும்?.

நீங்கள் மும்மொழிக்கொள்கையை விரும்பவில்லை என்றாலோ அல்லது தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றாலோ மத்திய அரசுடன் உரிய பேச்சுவாா்த்தை நடத்துங்கள். தமிழ் மண்ணில் வேறு மொழி பயிற்றுவிக்கப்படக்கூடாது என்று நீங்கள் உங்கள் மனநிலையை பிடித்து வைத்துக் கொண்டுள்ளீா்கள்.

கல்வி பெற முடியாமல் ஏராளமான குழந்தைகள் உள்ளனா் .பிற மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் மூலம் ஏராளமான கிராமப்புற மாணவா்கள் பயனடைகிறாா்கள். இந்தியா அனைத்து மாநிலங்களும் சோ்ந்த ஒரு நாடு.அதில் மாநிலங்கள் ஒரு தனிப்பட்ட நாடு போல செயல்பட முடியாது.

இப்போது நீங்கள் நவோதயா பள்ளிகளை எதிா்க்கலாம், நாளை மத்திய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு கொள்கைகளையும் ஒவ்வொரு மாநிலமும் எதிா்க்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்?

நவோதயா பள்ளிகள் மாநிலத்திற்கு கூடுதல் கல்வியை வழங்கும். தமிழ் இரண்டாவது மொழியாக வேண்டுமென்றால் நீங்கள் மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துங்கள். நாங்கள் உத்தரவிட்டு ஒன்பது மாதங்களாகியும் நீங்கள் இதுவரையில் நிலத்தை அடையாளம் காணவில்லை.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மாநில அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் மனநிலை மாறியது போல தெரியவில்லை . எனவே முதலில் உங்களுடைய மனநிலையை மாற்றுங்கள்.

நவோதயா பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இடத்தை அடையாளம் காணுமாறு நாங்கள் 15-12- 2005 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவை திரும்ப பெற முடியாது. நாங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு நவோதயா பள்ளிகளுக்கான இடத்தை அடையாளம் காணவும்,நவோதாயா பள்ளிகள் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் மூன்று மாத கால அவகாசம் வழங்குகிறோம்.

தற்போது மாற வேண்டியது தமிழக அரசின் மனநிலை தான். பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தின் கல்வி தரம் உயா்ந்த நிலையிலேயே உள்ளது. நவோதயா பள்ளிகள் தமிழக கல்வியின் தரத்தை எந்த விதத்திலும் குறைத்து விடாது.

நவோதயா பள்ளிகள் எந்த விதத்திலும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நவோதயா பள்ளிகள் உங்களுடைய கல்வியின் தரத்தை மேலும் உயா்த்தவே செய்யும். குழந்தைகளுக்கு கல்விக்கான கூடுதல் வாய்ப்பையும் வழங்கும் எனக்கூறி வழக்கை டிசம்பா் 14ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்

பின்னணி: தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்திரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க கடந்த 2017 செப்டம்பா் 11ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிா்த்து அதே ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments