அம்மா நலம், மீண்டும் இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
மருத்துவ அவசரம் காரணமாக தாயகம் திரும்பிய கௌதம் கம்பீர் மீண்டும் இங்கிலாந்து திரும்பவுள்ளார்.
மருத்துவ அவசரம் காரணமாக தாயகம் திரும்பிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.
மருத்துவ அவசரம் காரணமாக கடந்த வாரம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவசரமாக தாயகம் திரும்பினார்.உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கம்பீரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் அணியுடன் இணைவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் நாளை (ஜூன் 17) இணையவுள்ளதாக பிசிசிஐ தகவறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தாயார் நலமாக உள்ளார். மீண்டும் இந்திய அணியுடன் இணைவதற்காக கௌதம் கம்பீர் நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது. இந்திய அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.