சூர்யவன்ஷியிடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறு: கபில் தேவ்
வைபவ் சூர்யவன்ஷியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியது பற்றி...
வைபவ் சூர்யவன்ஷியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
15 வயதான இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அபாரமாக விளையாடி பல சாதனைகளைப் படைத்தார்.
ராஜஸ்தான் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடியதன் மூலம், 776 ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியைத் தன்வசப்படுத்தினார் வைபவ் சூர்யவன்ஷி. குறைவான பந்துகளில் அதிக ரன்களைக் குவித்த பெருமையைப் பெற்றதோடு, ரசிகர்களாலும் கிரிக்கெட் ஜாம்பவான்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டார்.
Advertisement
Advertisement
இதன் மூலம், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி தேர்வாகியுள்ளார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியதாவது:
அவர் சிறப்பான திறமை பெற்றவர். அவருக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். ஆனால், தன்னிடமுள்ள திறமையை மிக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் நம்பமுடியாத திறமை பெற்றவராக விளங்குகிறார். இந்திய அணியில் அவர் சரியாக விளையாட வேண்டும்.
உடற்தகுதியுடன் இருக்க வேண்டும், மேலும் பல விஷயங்கள் உள்ளன. அவர் எவ்வளவு கவனத்துடன் இருப்பார் என்பதற்கு அவரே பதில் சொல்ல முடியும். ஆனால் என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு தனித்திறமை வாய்ந்தவர். இளம் வீரரான அவருக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை. ஆனால், இந்தக் கட்டத்தில் அதிகமாக எதிர்பார்ப்பது தவறாகும் என்று தெரிவித்தார்.