இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல எங்களது திட்டம் இதுதான்: ஆப்கன் கேப்டன்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதற்கு தங்களது திட்டம் என்ன என்பது குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி பேசியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதற்கு தங்களது திட்டம் என்ன என்பது குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி பேசியுள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜூன் 13) தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குவதாக அந்த அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தரம்சாலாவில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின்போது, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இங்கு விளையாடியுள்ளோம். அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு உகந்தவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக, வெப்பமான நாள்களில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு உதவும் விதமாக இருக்கும். அதனால், எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதை சாதகமாகப் பார்க்கிறேன்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பையின்போது, அவர்கள் இறுதிப்போட்டியில் விளையாடினார்கள். அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான தயாரிப்பை நாங்கள் இங்கிருந்து தொடங்கவுள்ளோம் என்றார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களான ரஷித் கான், முகமது நபி மற்றும் காஸன்ஃபரை அந்த அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி நம்பியிருக்கிறார்.