மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் களமிறங்குவார் எனவும், தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர் அதற்கு முன்பாக களமிறங்குவார் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியது.
16 பந்துகளில் 37 ரன்கள் குவித்த தோனியின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும், தோனியின் அதிரடியான ஆட்டத்தால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள், தோனி சீக்கிரமாக களமிறக்கப்பட்டிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என தோனிக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் களமிறங்குவார் எனவும், தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர் அதற்கு முன்பாக களமிறங்குவார் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தோனி சீக்கிரமாக களமிறங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் எப்போதும் எந்த இடத்தில் களமிறங்குகிறாரோ அதே இடத்திலேயே களமிறங்குவார். தோனியின் ரசிகர்கள் அவர் விரைவில் களமிறங்க வேண்டும் என நினைக்கிறார்கள். தோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆனால், கேப்டன் பதவியை விட்டு விலகிய அவர், சீக்கிரமாக களமிறங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் கட்டாயம் சீக்கிரமாக களமிறங்கியாக வேண்டும் என்ற சூழல் உருவாகும்போது, அணிக்காக சீக்கிரமாக களமிறங்குவார் என்றார்.