‘கடினமான நேரத்தில் என்னை தொடர்புகொண்ட ஒரே நபர் தோனி..’- விராட் கோலி நெகிழ்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தோனி குறித்து கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2021இல்ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, இந்திய டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் கடந்தாண்டு விலகியுள்ளார்.
கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது.
இந்த சம்பவங்களின்போது விராட் கோலி மிகுந்த மனவருத்ததில் இருந்தார். அவரால் சரியாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை. பின்னர் இடைவெளிக்குப் பிறகு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தாண்டு ஐபிஎல் மார்ச் 31ஆம் தேதி துவங்குகிறது. இதனையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் தோனி குறித்து விராட் கோலி பேசியது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
2022இல் எனக்கு கடினமான நாள்களின்போது தோனி மட்டும்தான் என்னை தொடர்புகொண்டார். அவருடன் இருக்கும் இந்த தூய்மையான உறவுக்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.
ஒருமுறை தோனி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். திடகாத்திரமான மனிதர்களை பார்க்கும்போதும், அப்படி இருக்கும் நபரிடமும் மக்கள் அவர்களிடம் எப்படி இருக்கிறாய் என கேட்க மறந்துவிடுகிறார்கள். இது எனக்கு அந்த நேரத்தில் மிகவும் உதவிகரமாக இருந்தது. அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.
23 வயதில் இருந்து அவரிடம் துணை கேப்டனாக இருந்துள்ளேன். அவர் என்னை கேப்டனாக தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கும் எனக்கும் மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது. நான் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அவரிடம் சென்று கேட்க முடியும். எங்கள் இருவருக்கும் இந்த புரிதல் இருக்கிறது.