தமிழக அணியை வெறுப்பேற்றி 481 ரன்கள் குவித்த மும்பை அணி!
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்துள்ளது.
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்துள்ளது.
மும்பையில் மும்பை - தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
தமிழக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. சாய் சுதர்சன், சாய் கிஷோர் டக் அவுட் ஆனார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கடந்த ஆட்டத்தில் சதமடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் மட்டும் பொறுப்பாக விளையாடி அரை சதமெடுத்தார். தமிழக அணி 36.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரதோஷ் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளையும் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். முதல் நாள் முடிவில் மும்பை அணி 41 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று சிறப்பாக பேட்டிங் செய்தது மும்பை அணி. சர்ஃபராஸ் கான் சதமடித்து தனது அணி அதிக ரன்கள் முன்னிலை பெற உதவினார். முதல் தர கிரிக்கெட்டில் இது அவருடைய 12-வது சதம்.
சர்ஃபராஸ் கான் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தனுஷ் 71 ரன்களும் மோஹித் 69 ரன்களும் எடுத்தார்கள். கடைசி விக்கெட்டுக்கு மோஹித்தும் சித்தார்த்தும் 92 ரன்கள் எடுத்தார்கள். மும்பை அணி, 106.4 ஓவர்களில் 481 ரன்கள் எடுத்தது. தமிழக அணியின் திரிலோக் நாக், அஸ்வின் கிறிஸ்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள மும்பை அணி, இந்த ஆட்டத்தை வெல்லும் நிலைமையில் உள்ளது.