பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் தவிர்க்கப்பட்ட முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியில் விளையாடும் வீரா்களுக்கு, ஆட்டத்துக்கான ஊதியம் தவிர, ஆண்டு ஊதியமும் வழங்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்டது. அதில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயா் ஆகியோா் தவிர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் தவிர்க்கப்பட்ட முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : ஹார்திக் பாண்டியா போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாத ஹார்திக் பாண்டியாவும், அவரைப் போன்ற மற்ற வீரர்களும் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடினார்களா? பிசிசிஐ-ன் இந்த அறிவுறுத்தல் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இல்லையென்றால், இந்திய கிரிக்கெட் பெரிய சாதனைகளை படைக்க முடியாது. ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் இருவரும் திறமை வாய்ந்த வீரர்கள். அவர்கள் மிகுந்த வலிமையுடன் மீண்டும் வருவார்கள் என நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்ரேயாஸ் மற்றும் இஷன் கிஷனுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.