சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்! விராட் கோலி புதிய சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்று (செப். 30) படைத்தார்.
இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் 623 இன்னிங்சில் 27 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கைத் தொட்டார். தற்போது விராட் கோலி வெறும் 594 இன்னிங்சில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். 27 ஆயிரம் ரன்களைக் கடந்ததில் சச்சின் சாதனையையே கோலி முந்தியுள்ளார்.
இதன்மூலம் 27 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலிக்கு சொந்தமாகியுள்ளது.
இதற்கு முன்பு, இலங்கை வீரர் குமார் சங்கக்கார 666 இன்னிங்சில் 28,016 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்சில்27,483 ரன்கள் சேர்த்திருந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் 47 ரன்களை எடுத்தபோது, இந்தச் சாதனைப் பட்டியலில் விராட் கோலி இடம்பெற்றார்.
இதேபோன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்து விராட் கோலி மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.
ராகுல் திராவிட், சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ஆகிய வீரர்களைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை எடுத்த வீரராக விராட் கோலி இணைந்துள்ளார்.