உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: 21 ஆண்டுகளுக்குப் பின் இறுதிச்சுற்றில் இந்தியா!
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் இந்தியாவின் அனஹத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதைத் தொடர்ந்து. 21 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் அனஹத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார்.
மகளிர் தனிநபர் பிரிவின் அரைஇறுதியில் எகிப்தின் பார்ப் சமேயை 11–3, 8–11, 11–4, 11–6 என்ற செட் கணக்கில் வீழ்த்திய அனஹத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
Advertisement
Advertisement
உலகத் தரவரிசையில் 20வது இடத்திலுள்ள அனஹத் சிங், கடந்தாண்டு நடைபெற்ற தொடரில் அரையிறுதி வரை சென்று வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து, இருமுறை அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே இந்திய வீராங்கனை இவரே.
இதுபற்றி அனஹத் பேசுகையில், “நான் சில மாதங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் தொடரில் பார்புடன் விளையாடுகையில் குறைந்த பாயிண்ட் வித்தியாசத்தில் வென்றேன். அதனால், நான் இன்னும் நன்றாக விளையாடவேண்டும் என எண்ணினேன். நேற்றைய போட்டியில் நான் மிகச் சிறப்பாக விளையாடவில்லை. அதனைச் சரிசெய்து விளையாடி, நான் எந்தளவு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்பதை நிரூபிக்க நினைத்தேன்.
நான் 4 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியுள்ளேன். ஆனால் காலிறுதி, அரையிறுதி வரை சென்று தோற்றுவிடுவேன். ஆனால், இந்த முறை இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது எனது பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஆனால், இன்னும் தொடர் முடியவில்லை” என்றார்.
இன்று இரவு 10.30-க்கு நடைபெறும் இறுதிச்சுற்றில் எகிப்தின் ருக்கய்யா சலேம் உடன் அனஹத் சிங் விளையாடவுள்ளார்.
World Junior Squash Championships: India in the final after 21 years!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.