சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்
அதில் அவர் அறிவித்திருப்பதாவது,
சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதன்படி, சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.
விரிவாகப் படிக்க.. தமிழக நிதிநிலை அறிக்கை - முழு விவரம்
சென்னை நகரக் கூட்டாண்மை
சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்படும்.
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
சென்னையின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு, சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும்.
சென்னையுடன் இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சுவரொட்டிகள் இல்லாத சென்னை
சென்னை மாநகரத்தில், பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.
மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையேயான சேவை 4 ஆண்டுகளுக்குள் தொடங்கும்.
நீர்வழிகளில் கழிவுநீர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.2,371 கோடி நிதி ஒதுக்கப்படும்.