முகப்பு
தமிழ்நாடு

கனமழை சேதம்: கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்தார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வருக்கு விளக்கினார் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம்.
பகிர்:

கடலூர்: கடலூா் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவ மழை தீவிரம் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமாா் 2.50 லட்சம் ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல், மக்காச்சோளம், உளுந்து பயிா்கள் மற்றும் தோட்டப் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகளை மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

எனவே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரங்கமங்கலத்தில் பாதிக்கப்பட்ட குடிசைகளை பார்வையிட்டார். கால்நடைகளை இழந்தோர், வீடு பாதிக்கப்பட்ட 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து 13 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். பின்னர், அங்கிருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

குறிஞ்சிப்பாடி அரங்கமங்கலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத் திட்ட உதவி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், கே.என்.நேரு, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, அடூர் அகரம் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூா் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்த பிறகு சிதம்பரம் வழியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக சென்றார்.

முன்னதாக அவருக்கு கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.