காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு!
காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக டி.கே. சிவகுமார் அறிவித்திருப்பது பற்றி...
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மேல்முறையீடு செய்யப் போவதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இந்த நிலையில், தில்லியில் நேற்று கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் அவசர ஆலோசனையில் இன்று ஈடுபட்டார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசியதாவது:
“கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்து விட்டோம். தற்போது காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவதற்கு போதிய அளவு தண்ணீர் இல்லை என்று ஆணையத்தில் முறையிட்டோம்.
ஆனால், இதுபோன்ற கடுமையான சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி ஆணையம் உத்தரவிட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழலில் இருக்கிறோம்.
தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இன்னும் அவரது பயணம் உறுதியாகவில்லை. இருவரும் அவரவர் நலன் சார்ந்த விஷயங்களில் உறுதியாகவுள்ளோம். அவருடன் தொலைபேசியில் பேசியபோது, இரு மாநிலங்களில் நலன் சார்ந்த விஷயங்களை ஆலோசித்தோம்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைப்பதற்காக நாளை கர்நாடகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் காவேரி பிரச்னை குறித்து முறையிடுவோம்” எனத் தெரிவித்தார்.
காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்காக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருகின்ற ஆகஸ்ட் 1, திங்கள்கிழமை அன்று பெங்களூருவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Appeal against Cauvery Authority's order! D.K. Shivakumar announces!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.