FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உள்ளாட்சியில் முறைகேடு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; ஒழுங்கீனம், முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடு

1 பிப்ரவரி 2024, 3:12 pm IST
பகிர்:

மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; ஒழுங்கீனம், முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

"உள்ளாட்சியிலும் நல்லாட்சி' என்ற தலைப்பில், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல் அருகே பொம்மைகுட்டைமேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதன் கூட்டணி சார்ந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாநாடு வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடியாகும். மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். அதன் மூலமாகத்தான் உரிய  பயிற்சி பெற முடியும்.

தற்போது உங்களுக்கு கிடைத்துள்ள இந்தப் பதவியை மக்களுக்காகவே நீங்கள் பயன்படுத்த வேண்டும். கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களிடத்திலும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

தற்போதைய  மாநகராட்சி மேயர் முதல் ஊராட்சிப் பிரதிநிதிகள் வரையிலான பெண்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கணவரிடம் வழங்காதீர்கள்; தன்னிச்சையாக செயல்படுங்கள். மக்களின் நிலை அறிந்து உதவுங்கள். தங்களுடைய பொறுப்புகளில் ஒழுங்கீனமாகவோ, நிர்வாகத்தில் முறைகேடு செய்தாலோ அவை எனது கவனத்துக்கு தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்.

தமிழகத்தின் எதிர்காலம் என்பது திமுகவின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு திமுக தொண்டர்கள் தலைகுனியக் கூடாது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகிய உங்களுக்கு முதலில் தேவை ஒற்றுமைதான். அந்த ஒற்றுமை இல்லையெனில் அனைத்துப் பணிகளும் முடங்கிவிடும். விருப்பு, வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலப் பணிகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்
என்றார்.

இந்த மாநாட்டில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம், பல்வேறு துறை அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments