முகப்பு
தமிழ்நாடு

வைகையில் வெள்ளப்பெருக்கு: மதுரை யானைக்கல் பாலம் மூழ்கியது!

வைகை அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மதுரை யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 18 அக்டோபர் 2022, 2:03 pm IST
பகிர்:

வைகை அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மதுரை யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்ட பகுதிகள் மூல வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரினால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது 7,000 கன அடி நீர், வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து அணைக்கு வரும் 7,000 கன அடி தண்ணீரும் உபரிநீராக முழுவதுமாக மதகுகள் வழியாக திறந்து விடப்படுகிறது. வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

வைகை அணையில் திறந்து விடப்பட்டுள்ள நீரால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை ‘கல் பாலம்’ எனப்படும் யானைக்கல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அணுகு சாலையையொட்டி இரு கரை தொட்டு வெள்ளம் ஆர்ப்பரித்துச் செல்வதால், ஆற்றின் இருபுறமும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் என்பதால் வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.