முகப்பு
தமிழ்நாடு

கோவை: வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம்!

கோவை மாநகரில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 24 ஜூன் 2023, 2:59 pm IST
பகிர்:

கோவை மாநகரில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கோவை மாநகரில், தற்போது வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, வரும் 26ம் தேதி முதல் காவல்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில், அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே, பேருந்து, லாரி, கார் போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை தங்களது வாகனங்களிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

வரும் 26ம் தேதி முதல் மேற்கொள்ளப்படவிருக்கும் வாகன தணிக்கையில், விதிமுறைகளை மீறி ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளதாகவும், எனவே 100% விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை 100% செயல்படுத்த திட்டமிடப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில், 26ம் தேதி முதல் வாகன சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களுக்கு ஒருவார காலத்திற்கு போக்குவரத்து பூங்காவில தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.