FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 27-ல் தஞ்சை வருகிறார் முதல்வர் மு.க.  ஸ்டாலின்!

தஞ்சாவூரில் பொலிவுறு  நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 140 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 14 கட்டுமானங்களைத் திறந்து வைப்பதற்காகத்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 27ஆம் தேதி வருகிறார்.

Updated On : 23 ஜூலை 2023, 1:15 pm IST
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் கே.என். நேரு.
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பொலிவுறு  நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 140 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 14 கட்டுமானங்களைத் திறந்து வைப்பதற்காகத்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 27ஆம் தேதி வருகிறார்.

இதையொட்டி, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம், ஆம்னி பேருந்து நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

திருச்சிக்கு தமிழக முதல்வர் ஜூலை 26 ஆம் தேதி காலை வருகிறார். திருச்சியில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் 27 ஆம் தேதி காலை திருச்சியில் நடைபெறவுள்ள விவசாயிகள் சங்கமம் என்கிற கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார்.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, பிற்பகலில் தஞ்சாவூர் வருகிறார். மாலை 5 மணியளவில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம், மாநாட்டு அரங்கம் உள்பட ரூ. 140 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 14 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். வல்லம் குவாரி சாலைக்கு தமிழ்ச் சாலை என பெயர் சூட்டவுள்ளார்.

பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நடைபெறும் அனைத்து மாவட்டங்களில் 90 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. சில இடங்களில் சட்டரீதியான பிரச்சனைகள் வந்துவிட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அவற்றையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 4 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்றார் அமைச்சர் நேரு.

அப்போது, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் க.  சரவணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments