செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
செந்தில் பாலாஜியின் தரப்பில் அனைத்து வாதங்கள் ஏற்கனவே, நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கத்துறையினர் குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் தொடர்ந்து 49 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி கடந்த மார்ச் மாதம் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் விசாரணையை இன்று காலை பட்டியலிட்டிருந்த நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் பிற்பகலுக்கு ஒத்திவைக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.