FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்திற்கு திறப்பு!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வாய்க்கால் மற்றும் நேரடி ஆற்றுப் பாசனத்திற்கு வியாழக்கிழமை காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி 2024, 10:10 am IST
வாழப்பாடி புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் பாசன விவசாயிகள்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வாய்க்கால் மற்றும் நேரடி ஆற்றுப் பாசனத்திற்கு வியாழக்கிழமை காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

Advertisement

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன.

அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கடந்தாண்டு போதிய மழையில்லாததால் அணை நிரம்பவில்லை. அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று போனதால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது 33.36 அடியில், 53.34 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே, குட்டை போல சேறும் சகதியுமாக தேங்கிக் கிடக்கிறது. அணையின் நீர்பிடிப்புப் பகுதி வறண்டு கிடப்பதால் கால்நடை மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது.

இந்த நிலையில், இரண்டு மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை (சிறப்பு நனைப்பு) வாய்க்கால் மற்றும் நேரடி ஆற்றுப் பாசனத்திற்கு பாசனத்திற்கு வசிஷ்டநதியிலும் திறந்து விட வேண்டும் என, புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக்கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வியாழக்கிழமை(பிப். 15)காலை 8 மணி முதல் தொடர்ந்து 4 நாள்களுக்கு வலது வாய்க்காலில் வினாடிக்கு 35 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் வினாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு 50 கனஅடி (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கனஅடி வீதம் 4 நாள்களுக்கு மொத்தம் 17.28 மில்லியன் கன அடி) தண்ணீர் திறக்கவும், வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 5 நாள்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம், (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கனஅடி / மொத்தம் 21.60 மில்லியன் கனஅடி தண்ணீர்) அணையின் தலைமை மதகு வழியாக ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி உத்தரவின் பேரில், வியாழக்கிழமை காலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, உதவி பொறியாளர் கோகுல்ராஜா மற்றும் பாசன விவசாயிகள் தண்ணீர் திறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments