விஜய்க்கு சீமான் வாழ்த்து!
தவெக தலைவர் விஜய்யை வாழ்த்தினார் சீமான்.
10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவித்த தவெக தலைவர் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை. கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை. ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது.
பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவிகளை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது விழாவில் தவெக தலைவர் விஜய், பரிசு மற்றும் விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.