அன்புமணிதான் தலைவர்; பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்! - தேர்தல் ஆணையம் பதில்
அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை...
பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறிய நிலையில், பாமகவின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார்.
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது. அதில், ஆவணங்களின்படி அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
Advertisement
Advertisement
அன்புமணி, தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டதாக ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து தன்னுடைய பாட்டாளி மக்கள் கட்சியை அன்புமணி அபகரித்ததாக தில்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ராமதாஸ் தரப்புக்கும் அன்புமணி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இந்த விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பு, "எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால் அவர் தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம். கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம்" என்று கூறியுள்ளது.
தேர்தல் வரை இரு தரப்புக்கும் இடையே இதே நிலை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது, 'வேட்பாளர்களை அங்கீகரித்து, யார் கையெழுத்திடுவதை ஆணையம் ஏற்கும்? என்ற நீதிபதிகள் கேள்விக்கு, 'இரு தரப்பும் பிரச்னைக்குரியதாக இருந்தால், இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது. கட்சியின் சின்னம் முடக்கி வைக்கப்படும்' என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
வழக்கின் விசாரணை முடிவில், பாமகவின் ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தை அணுக தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பது தவறு என்று நீதிபதிகள் கூறி வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளனர்.
Delhi High Court hearing case filed by Ramadoss against Anbumani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.