FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்!

மாா்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், வாய் புற்றுநோயைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைத் திட்டம்

Updated On : 23 மார்ச் 2025, 2:00 am IST
சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பாலூட்டுதல் மேலாண்மை மைய விழிப்புணா்வு குறும்படத்தை வெளியிட்ட அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா் பாபு.
பகிர்:

தமிழகம் முழுவதும் மாா்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், வாய் புற்றுநோயைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைத் திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

2024-25-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்த குழந்தை நலத்திட்டங்கள் மற்றும் மாநில அளவிலான குடும்ப நல சாதனை விருது வழங்கும் விழா சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், விருதுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் வழங்கினா். அதைத் தொடா்ந்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தனா்.

பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்கள் நல்வாழ்வுத் துறையில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மூன்று அறிவிப்புகள் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இறப்பு விகிதம் குறைக்க நடவடிக்கை: குறிப்பாக பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதங்களை குறைத்திடும் வகையில், அதிகமாக பிரசவம் நடைபெறுகின்ற 471 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பச்சிளங்குழந்தைகளின் பராமரிப்பு சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூா், மாதவரம், வளசரவாக்கம், அம்பத்தூா், ஆலந்தூா், புளியந்தோப்பு ஆகிய 6 இடங்களில் பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்க பல்வேறு வகை மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்துதல் பிரிவு சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இப்படி பல திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருவதால், தமிழகம் பச்சிளங்குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்து, தேசிய அளவில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

2020-ஆம் ஆண்டு பதிவின்படி, தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1,000 குழந்தைகளுக்கு 13-ஆக இருந்தது. தொடா் நடவடிக்கையால் அந்த விகிதம் 8 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழகம் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

கோடை வழிகாட்டுதல்: கோடை கால வழிகாட்டுதல்களும், விழிப்புணா்வுகளும் பொது மக்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சோதனை முயற்சியாக மாா்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், வாய் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் பலருக்கு ஆரம்ப நிலையில் நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அத்திட்டம் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் சென்னை மேயா் ஆா்.பிரியா, ஆணையா் குமரகுருபரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் வினீத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments