வாக்குச்சாவடி அலுவலர்களே திணறுகிறார்கள்; அசாமுக்கு மட்டும் சலுகை ஏன்? - என்.ஆர். இளங்கோ
எஸ்ஐஆர் குறித்து திமுக எம்பி என்.ஆர். இளங்கோ பேட்டி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் அசாம் மாநிலத்திற்கு மட்டும் சலுகை ஏன்? என திமுக எம்பி என்.ஆர். இளங்கோ தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மட்டும்தான் படிவங்கள் கொடுக்கப்படுகிறது என்பது கூறுவது உண்மைக்கு புறம்பான செய்தி.
Advertisement
Advertisement
அதிமுகவினர் எஸ்ஐஆரை வரவேற்கின்றனர். அதில் உள்ள குழப்பங்களை, பிரச்னைகளை தெரிந்துகொள்ளாமல் பாஜகவிற்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.
இப்போதுதான் அவர்களுக்கு எஸ்ஐஆர் பற்றி புரிகிறது. அதிமுக தொண்டர்களே தற்போது எஸ்ஐஆரால் வாக்குரிமை பறிபோகலாம் என்று அறிந்திருக்கிறார்கள். சில இடங்களில் இப்போதுதான் அதிமுகவினர் கணக்கீட்டு படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் படிவத்தை பூர்த்தி செய்யவே திமுக முகவர்கள்தான் உதவி செய்தததாக அவரே சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வாக்குச்சாவடி அலுவலர்களே திணறும் நிலையில் உள்ளனர். அரசியல் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களால் நாளொன்றுக்கு 50 படிவங்கள் மட்டுமே நிரப்ப முடிகிறது. முறையான பயிற்சி அளிக்காமல் வாக்குச்சாவடி அலுவலர்களை மக்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்
எஸ்ஐஆரை நிறைவேற்றுவதில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.
அசாமில் எஸ்ஐஆர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு யாரும் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். வாக்குச்சாவடி அலுவலர்களே ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக்கொள்வார்கள்.
அசாமுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் வித்தியாசம் ஏன்? அசாமுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக வரவேற்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். மக்களுடைய வாக்குரிமை காப்பாற்றப்பட வேண்டும். தகுதியான ஒருவர்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது" என்று பேசியுள்ளார்.
DMK MP NR Elango press meet on SIR
இதையும் படிக்க | நாளை(நவ. 19) பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் இபிஎஸ்!