நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கான ரூ. 18,000 கோடி உதவித்தொகையை கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் இன்று(நவ. 19) பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.
தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா (CODISSIA) அரங்கில் 'தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025' இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருள்களை விநியோகிப்போர், விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார். மேலும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 21வது தவணையும் பிரதமர் விடுவித்தார்.
இந்நிகழ்விற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ராமசாமி, உழவர் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி .ஆர்.பாண்டியன், மேலாண்மை குழு தலைவர் வாழ. கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த மாநாட்டில் நாட்டின் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு (பி.எம்.கிஸான்) திட்டத்தின்கீழ் 21-ஆவது தவணையை பிரதமா் நரேந்திர மோடி விடுவித்தார்.
முன்னதாக, கோவை விமான நிலையம் வந்த பிரதமரை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் கொடிசியா சாலையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். மேலும், தமிழக கலாசாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டன.
இதனை அடுத்து கொடிசியா அரங்கம் வந்த பிரதமருக்கு விழா குழுவினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாட்டின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இயற்கை வேளாண் பொருட்கள் கண்காட்சி அரங்கினை பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது இயற்கை வேளாண் பொருள்கள் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து இயற்கை விவசாயிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மேடைக்கு வந்ததும், மாநாட்டில் கலந்து கொண்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
விழா குழுவினர் சார்பில் இயற்கை வேளாண் பொருள்களால் உருவாக்கப்பட்ட நினைவு பரிசுகள் பிரதமருக்கு வழங்கப்பட்டன.
இதையும் படிக்க: கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கிவைத்தார் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.