அடுத்த 4 நாள்களுக்கு வெளியே செல்ல வேண்டாம்.. வெய்யில் கொளுத்தும்!
சென்னையில் ஏப்ரல் 15 வரை வெப்பம் அதிகரிக்கும்..
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 15 வரை வெய்யில் இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், விதர்பா, மரத்வாடாவிற்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, உள் கர்நாடகம் மற்றும் உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 17 வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Advertisement
அதிகபட்ச வெப்பநிலை..
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இன்று முதல் ஏப்ரல் 15 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னையை பொருத்தவரை..
இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
எச்சரிக்கை..
இயல்பை விட வெய்யில் அதிகரிக்கும் என்பதால், முடிந்தவரை வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் கூடுமானவரை வெளியில் வராமல் இருப்பது நல்லது.
வெய்யிலில் வரும் பட்சத்தில், நீர் பானங்களான, மோர், இளநீர், பதநீர், பழரசம் உள்ளிட்ட உடலுக்குக் குளிர்ச்சித் தரும் பொருள்களை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாகக் குடை எடுத்துசெல்லவும். தலையில் கட்சிப், தலைக்கவசம் உள்ளிட்டவை பயன்படுத்தி உஷ்ணம் அதிகரிக்காமல் தவிர்க்கவும்.