ஜனநாயகன் வெளியான பிறகு ஒரு ரசிகனாக திரையரங்கில் பார்ப்பேன்! - அண்ணாமலை பேச்சு!
ஜனநாயகன் படம் வெளியான பிறகு திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன் என அண்ணாமலை பேச்சு...
ஜனநாயகன் திரைப்படம் திரையரங்கில் வெளியான பிறகு ஒரு ரசிகனாக திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமாக நடிகர் விஜய் நடித்த “ஜன நாயகன்” படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் வெளியாகாமல் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.10) அதிகாலை இணையத்தில் கசிந்தது.
இந்த விவகாரம் குறித்து முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, ஜன நாயகன் படக்குழுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்ததற்கு நாங்கள் அனைவரும் வருத்தப்படுகிறோம். அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். படம் வெளியாகும்போது ஒரு ரசிகனாக நானும் சென்று பார்க்க இருக்கிறேன். அதில், பாஜகவைச் சார்ந்த அமைச்சர் எல். முருகன் குறித்து பேசுவது வன்மைத்தனத்தின் உச்சகட்டம். ஆனால், இது நடந்திருக்கக் கூடாது.
பலருடைய உழைப்பும், ரத்தமும், பணம் மற்றும் வியர்வையும் அதில் இருக்கிறது. எந்த விஷக்கிருமிகள் அதைச் செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒருவேளை இந்தப் புகாரை சிபிஐ-க்கு எடுத்துச்செல்வதாக இருந்தால் நாங்களும் அதை ஆதரிக்கிறோம். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.