பிரதமரை அச்சுறுத்துகிறாரா முதல்வர்? ஸ்டாலின் விடியோவுக்கு அண்ணாமலை பதில்!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட விடியோவுக்கு அண்ணாமலை பதில்...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட விடியோவில் பிரதமரை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.
Advertisement
தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து விடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அண்ணாமலை, “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள விடியோவில், அவர் பேசிய மொழி நமது நாட்டின் பிரதமரையே பகிரங்கமாக மிரட்டும் வகையில் இருந்தது. தமிழகம் 1960-களுக்கு திரும்பும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் உரிய இந்த இடஒதுக்கீடு மசோதா, 1996 ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருந்தது என்பதைத் தமிழகத்தின் முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். 2010 ஆம் ஆண்டில், இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேறவில்லை. ஆகையால், அனைவரையும் ஒன்றிணைக்க பிரதமர் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2023 செப்டம்பரில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது மக்கள் தொகையின் அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று நாங்கள் எங்குமே கூறவில்லை” எனத் தெரிவித்தார்.