அஜித் ரசிகர் மன்றத்தைக் கலைத்தது ஏன்? அமர்க்களம் இயக்குநர் விளக்கம்
நடிகர் அஜித்தின் ரசிகர் மன்றம் ஏன் கலைக்கப்பட்டது என இயக்குநர் சரண் விளக்கம்
நடிகர் அஜித்தின் ரசிகர் மன்றம் ஏன் கலைக்கப்பட்டது என இயக்குநர் சரண் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் அமர்க்களம் படத்தின் ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தின்போது, செய்தியாளர்களுடன் இயக்குநர் சரண் பேசுகையில், "அவர் எப்போதும் ரசிகர்களை மதிக்கக் கூடியவர். அவரின் ரசிகர் மன்றத்தைக் கலைத்ததன் காரணம் என்னவென்றால், ரசிகர்களுக்குள்ளேயே மன்றம், பதவி என்று ஓர் அரசியல் நடப்பதால், அவர்களுக்குள்ளேயே மோதிக் கொண்டனர்.
ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்குள் எந்தவித சச்சரவும் இருக்கக் கூடாது என்ற காரணத்தைச் சொல்லித்தான், அவர் மன்றத்தைக் கலைக்கும் முடிவை எடுத்தார். அவரின் ரசிகர்கள் மீது எப்போதும் அவருக்கு மரியாதையும் மதிப்பும் உண்டு.
Advertisement
அவர் எப்போதுமே சொல்வது என்னவெனில், நீங்கள் எப்போதும் உங்களின் வேலையில் விழிப்புடன் இருங்கள். படம் நல்லாயிருந்தால் பாருங்கள்; பிடித்தால் பாருங்கள் என்று மட்டுமே அவர் சொல்வார்.
புகழுக்காகவோ மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்றோ அவர் பேச மாட்டார். அவர் ஓர் எதார்த்தமான மனிதர். தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட ஒரு சிற்பம்தான் அவர்.
அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்கள். அசல் படத்தின்போது, விஜய்க்கு பாடல்களை அஜித் போட்டுக் காட்டினார். அவர்களுக்குள் எப்போதும் பிரிக்க முடியாத உறவு இருந்து வருகிறது.
அஜித்தின் அரசியல் என்பது வாக்களிப்பதுதான். வாக்களிப்பதே அரசியல்தானே. அவருடைய அரசியல் கடமையை அவர் செய்து விட்டார்.
இப்போதுகூட, வாக்களிப்பதற்காக பெல்ஜியத்திலிருந்து பறந்து வந்து விட்டார். அவர் நினைத்திருந்தால், அவரின் வெற்றியை அங்கேயே கொண்டாடித் தீர்த்திருக்கலாம்.
ஆனால், வாக்களிக்கும் ஜனநாயகக் கடமைக்காக அவர் வந்துவிட்டார். அதுவும் தமிழ்நாட்டில் முதலில் பதிவான வாக்கு அவருடையதுதான்" என்று தெரிவித்தார்.