பேரறிவாளன் வழக்குரைஞர் பதிவு: பார் கவுன்சிலுக்கு காங். எம்.பி. சுதா கண்டனம்
பேரறிவாளன் வழக்குரைஞராக பதிவு செய்யப்பட்டதற்கு காங். எம்.பி., சுதா கண்டனம் தெவித்தது தொடர்பாக...
சென்னை: பேரறிவாளன் வழக்குரைஞராக பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வெளியே புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்தநாள் ஒரு கருப்பு நாள். அவரை வழக்குரைஞராக பதிவு செய்த பார் கவுன்சில் உறுப்பினர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Advertisement
பேரறிவாளன் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. உச்ச நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டாலும் இது ஒரு தவறான முன்னுதாரணம். இது தொடர்பாக குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன்.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் இதுபோன்ற வழக்குரைஞர் பதிவு நடந்துள்ளது .
எனவே பேரறிவாளன் வழக்குரைஞர் பதிவை திரும்பப் பெற வேண்டும். கருணை மனு மூலம் தான் அவர் விடுதலையாகி உள்ளார். எனவே, அவரை வழக்குரைஞராக பதிவு செய்தது, பார் கவுன்சில் விதிகளுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.