உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய உதயநிதியை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதில் சந்தேகம் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட புகார்களில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் பதிவாகியிருக்கிறது. திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Doubts raised over Udhayanidhi's arrest: Edappadi Palaniswami
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.