மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்த ரூ. 10 கோடி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு!
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து...
2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்திட, ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யை இன்று (ஆக. 4) தலைமைச் செயலகத்தில், 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியினை நடத்துவது குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர்
விஜய் அமிர்தராஜ், முதன்மைச் செயல் அலுவலர் ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பி. பிரசாந்த், கௌரவ செயலாளர் ந. வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து, 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிஸ் அரங்கில் “சென்னை ஓபன் WTA 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – 2026” போட்டியை நடத்தவுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியினை சிறப்பாக நடத்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் உலகின் முன்னணி மகளிர் டென்னிஸ் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியானது தமிழ்நாட்டை உலக விளையாட்டு அரங்கில் மேலும் உயர்த்துவதுடன், விளையாட்டு சுற்றுலாவை ஊக்குவித்து, இளம் வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் நடத்தப்படவுள்ளது.
சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சந்திப்பின்போது, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமைச் செயலர் மு. சாய்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Chief Minister C. Joseph Vijay has announced an allocation of rs 10 crore to host the 2026 Chennai Open International Women's Tennis Championship (WTA-250)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.